சென்னை: சென்னை தாம்பரத்தில் இரவு எரிந்து கொண்டிருந்த கொசுவர்த்திச் சுருள் மீது போர்த்திக் கொள்வதற்காகப் போடப்பட்டிருந்த போர்வை பட்டு, திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில், வயது முதிர்ந்த தந்தையும் மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை ரங்கநாதபுரத்தில் தனது வீட்டின் முன் அறையில் 90 வயது நிறைந்த ஹபீப் மொஹம்மது உறங்கிக் கொண்டிருந்தார். அவருக்குத் துணைக்காக அவரது 60 வயது மகள் மெகர் ஆயிஷாவும் உறங்கிக் கொண்டிருந்தார். இரவு கொசுத் தொல்லைக்காக வைத்திருந்த கொசுவர்த்திச் சுருள் திடீரென போர்வையில் பட்டு தீப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து எழுந்த புகையைக் கண்டு, அடுத்த அறையில் படுத்திருந்த உறவினர் ஓடோடி வந்து பார்த்துள்ளார். அப்போது போர்வையில் தீப்பிடித்தது தெரியவந்துள்ளது. உடனே அவர், வெளியே ஓடி வந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
இருப்பினும், ஹபீப் மொஹம்மது படுக்கையிலேயே உயிரிழந்து கிடந்த நிலையில், 40 சதவீத தீக் காயங்களுடன் அவரது மகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவரும் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



