சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதி உடல்நிலை குறித்து பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மோசமான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது தி.மு.க.வினரை மட்டுமல்ல, பொதுமக்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் தீனா என்கிற தீனதயாளன் (23) தனது பேஸ்புக் பக்கத்திலும், வாட்ஸ்-அப்பிலும் கருணாநிதி உடல்நிலை குறித்து தவறாக பதிவிட்டு வதந்தி பரப்பினார்.
இதை அறிந்த குடியாத்தம் தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஞானபிரகாசம் (27) குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரைப் பெற்ற இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சம்பந்தப் பட்ட தீனதயாளன் மீது வழக்குப்பதிவு செய்தார்.இதை அடுத்து, சமூக வலைத்தளங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து வதந்தி பரப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது செய்யப் பட்டார்.