வெளிப்படையான ஊழல்களைப் புரிந்து கொண்டிருக்கும் அதிமுக.,வின் ஆட்சியை, விஞ்ஞான ஊழல் புகழ் கட்சி திமுக.,. அகற்றப் போகிறது! அதற்கான தொடக்க ஆர்ப்பாட்டம் சேலத்தில் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கலந்து கொள்ளும் முதல் போராட்டக்களம் இது! அதிமுக அரசைக் கண்டித்து சேலத்தில் திமுக சார்பில் நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது, “ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராக இருக்க வேண்டும்” என்று பேசினார்.
மேலும், மனித உரிமைகளை தமிழக அரசு அடகு வைத்துள்ளது. தமிழக மக்கள் பார்க்காத ஊழல்களை அதிமுக அரசு செய்து வருகிறது. மக்கள் மீது அரசு நேரடி தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. தமிழகத்தில் இருக்கும் ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்,
தற்போது இருக்கும் அரசு பதவி விலக வேண்டும் என அரசியல்வாதிகள் மட்டுமல்ல மக்களும் நினைக்கிறார்கள் ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராக இருக்க வேண்டும். 33 அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளனர். ஊழலின் கதாநாயகன் எடப்பாடி பழனிசாமிதான். அவரது அமைச்சர்கள் அதன் கூட்டாளிகள்.
சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்யலாம் என்றனர். ஆனால் சேலம் மாவட்டத்தை நான் விருப்பப்பட்ட தேர்வு செய்தேன். சேலத்திற்கு எதிராக அரசு காய் நகர்த்தி வருகிறது. விவசாய நிலங்களை அழிக்க பார்க்கிறது. ஊழல் செய்வதில் யார் சிறந்தவர் என்று போட்டி வைத்தால் எல்லா அதிமுககாரர்களும் முன்னிலையில் இருப்பார்கள்.
நான் ஆதாரத்துடன்தான் பேசுகிறேன். நான் கருணாநிதியின் மகன். தைரியம் இருந்தால், நான் பேசியதில் தவறு என்றால் வழக்கு போடட்டும். அவர்களால் போட முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு அவர்கள் மீது உள்ள வழக்குகளை எதிர் கொள்ளவே நேரம் இல்லை. அதற்காக நீதிமன்றம் போகவே நேரம் இல்லை என்று கூறியுள்ளார்.




