சதுரகிரி வழிபாட்டை காப்போம் என்று கூறி, வரும் ஜூன் 2 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளனர் சதுர கிரி வழிபாட்டு பக்தர்கள்.
அவர்கள் இது குறித்துக் கூறியதாவது…
1976லிருந்து கிட்டத்தட்ட 50 வருடங்களாக மலைமேல் சிவனை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவருக்கும் உணவளிக்கப்பட்டு வருகிறது. வருடம் முழுவதும் 24 மணி நேரமும் உணவளித்து வந்தன அங்குள்ள அன்னதான மடங்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தினால் சதுரகிரி மலை ஏறுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்தனர்!
மாதத்திற்கு வெறும் 5 நாட்களுக்கு அமாவாசை பௌர்ணமி தினங்களில் மட்டுமே பக்தர்களை அனுமதித்தனர்.
ஆனால் இன்று இந்தக் கோவிலையும் கோவில் வழிபாட்டையும் சீர்குலைக்கும் விதமாகவோ அல்லது தனியாருக்கு வணிக ரீதியாக பலன் தர வேண்டும் எனவோ ஏதோ உள்நோக்கம் கொண்ட காரணத்தை வைத்து 50 ஆண்டுகளாக இருந்த அன்னதான மடத்தை மூடியுள்ளனர்.
ஆனால் தனியார் ஹோட்டலுக்கு விற்பனைக்கு அனுமதித்துள்ளனர். இதன் விளைவாக இட்லி 20 ரூபாய், தோசை 100 ரூபாய் என விற்பனை செய்து பக்தர்களை அவதிக்கு உள்ளாக்குகின்றனர்.
கடந்த மாதம் வரை மடங்கள் மூலம் நடந்த அன்னதானக் கூடங்களை மூடி தடை செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு சார்பில் ஆலயங்களில் அன்னதானமிட்டார், ஆனால் இன்று அரசுக்கு கால் காசு செலவில்லாமல் அரை நூற்றாண்டு காலமாக நடைபெற்று வந்த அன்னதானத்தை தடை செய்கிறார்கள்.
அதற்கான காரணமாக சுற்றுச்சூழல் மாசு எனக் கூறுகின்றனர். அங்கே அன்ன தானத்திற்கு கேஸ் அடுப்பே பயன்படுத்தப் படுகிறது. பக்தர்களுக்கு எவர்சில்வர் தட்டுகளில் அல்லது இலைகளில் மட்டுமே உணவளிக்கப்படுகிறது.
இங்கே எங்கே உருவானது மாசு? உணவுக் கழிவுகளால் எங்கே மாசு உருவாகும். ஸ்டெர்லைட் ஆலையால் மாசு உண்டாகுது என்று ஊரே போராடும்போது அங்கே உங்களுக்கு மாசு தெரியவில்லை.
இங்கே பசிக்கு சோறு போட்டால் மாசு உண்டாகிறது என்று தடை போடுகிறார்கள்.
ஆள்பவரும் ஆளத் துடிப்பவரும் எவரும் எங்கேடு கெட்டும் போகட்டும்.
இந்து, இந்து மதம் எனக்கூவி அரசியல் செய்வோரும் எக்கேடு கெட்டும் போகட்டும்.
ஆனால், சதுரகிரி பக்தர்களான நாம் வேடிக்கை பார்ப்பது தவறு. சதுரகிரி மலைக்கு 10 வருடம் 20 வருடம்னு தொடர்ச்சியாக ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் தவறாமல் வருபவர்கள் பல ஆயிரம் உண்டு! அவர்களுக்காக ஒரு போராட்டத்தை தொடருவோம்.
இதை ஆரம்ப நிலையிலேயே சதுரகிரி பக்தர்கள் தடுக்க வேண்டும். ஆகவே அடுத்து வரும் அமாவாசை நாளில் இருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவோம். வரும் ஜூன் 2 ஆம் தேதி தொடர் உண்ணாவிரதப் போராட்டம், சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்க ஸ்வாமி ஆலயத்தில் தொடங்கப் படும் என்று கூறுகின்றனர் சதுரகிரி பக்தர்கள்.