தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, முதன்மை கல்வி அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வித் துறை, அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடை நிற்றலை தவிர்க்கும் பொருட்டும், மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் பொருட்டும், பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், சீருடை, நோட்டு, புத்தகங்கள் உட்பட 14 வகையான நலத்திட்டங்களை வழங்குகிறது.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக ‘ஸ்மார்ட்’ வகுப்பறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் 2019-2020ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் திட்டமிட்டுள்ளது.இதற்காக, நான்கு மாவட்ட கல்வி அதிகாரிகளையும் அழைத்து விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், &’ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, இந்தாண்டும், நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, வீடு வீடாக சென்று அரசு பள்ளிகளில், மாணவ, மாணவியரின் கல்வி முன்னேற்றத்திற்கு உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கூறப்பட்டுள்ளது.
பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் எந்தெந்த துறையில் எந்த மாதிரியான பதவிகளில் உள்ளனர் என்பது குறித்த விழிப்புணர்வு போர்டு, பள்ளி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்படும்.
அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் பின் தங்கிய பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கான காரணம் குறித்து கேட்டறிந்து, வரும் கல்வியாண்டு முதல் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தேர்ச்சி சதவீதம் சிறப்பாக உள்ள பள்ளிகளில் எந்த மாதிரியான அடிப்படை வசதிகள் உள்ளது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும்’ என்றார்.



