
திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினருக்கான 52 விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையின மாணவர்களுக்காக மொத்தம் 52 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் மாணவர் மற்றும் மாணவிகளுக்கென கீழ்க்கண்டவாறு மொத்தம் 52 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர், மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவர், மாணவிகளும் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவர், மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாசார அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்த விடுதிகளில் இலவசமாக உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும்.
10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர், மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.
மலைப் பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.
பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும்.
இந்த தொலைவு விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவர், மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்திலிருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி மாணவர்கள் வரும் 20-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவர்கள் ஜூலை 15-ஆம் தேதிக்குள்ளும் விடுதி காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



