ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி, சென்னைக்கு குடிநீர் ரயில் வெள்ளிக்கிழமை இன்று காலை புறப்பட்டது. வாழை மரம் தோரணம் கட்டி, மலர் மாலைகள் போட்டு, தடபுடலாக பூஜைகள் செய்து சென்னைக் குடிநீர் ரயிலை அலுவலர்கள் வழியனுப்பி வைத்தனர்.
சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக, வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப் பட்டன. இதற்காக ஜோலார்பேட்டை, வில்லிவாக்கம் இரு பகுதிகளிலும் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றன.
இந்த இரு இடங்களிலும் இதற்கென்றே வடிவமைக்கப்பட்ட 50 கலன்களில் 25 லட்சம் லிட்டர் குடிநீர், ரயில்களில் கொண்டு வரப்பட்டு இன்று முதல் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு நாளும் நான்கு நடையாக, 1 கோடி லிட்டர் தண்ணீரை சென்னைக்குக் கொண்டு வரும் பணியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, இன்று காலை 7.30 மணி அளவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கலன்களில் நீர் நிரப்பப்பட்ட ரயில் சென்னை நோக்கி புறப்பட்டது. அது இன்று பகல் 2 மணி அளவில் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை வந்தடையும். வில்லிவாக்கத்தில் இருந்து குழாய் மூலம், கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு நீர் கொண்டு செல்லப்படும். அங்கே குடிநீர் சுத்திகரிக்கப் பட்டு, பின்னர் சென்னை நகர மக்களுக்கு வழக்கம் போல் லாரிகளில் விநியோகிக்கப்படும்.


