
சென்னை:
ஈழத்தில் தமிழர்களை எல்லாம் சாகடித்துவிட்டு, இப்போது கொலையாளிகளை மன்னித்து விட்டேன் என்று சொல்வது வெற்று அரசியலுக்காகத்தான்… இப்படி ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதில் கொடுத்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.
ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில சிங்கப்பூரில் முன்னாள் ஐஐஎம் மாணவர்கள் மத்தியில் உரையாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தன்னிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது, “எங்கள் தந்தை கொலையால் நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்தோம், காயப்பட்டோம். பல ஆண்டுகளாக கோபத்துடன் இருந்தோம். இருப்பினும எப்படியோ நாங்கள் கொலையாளிகளை முற்றிலுமாக மன்னித்துவிட்டோம். உண்மையாகவே நாங்கள் அவர்களை மன்னித்துவிட்டோம்” என்று கூறினார்.
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு, தமிழக அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பையும், எதிர்வினைகளையும் கிளப்பியுள்ளது. அவரது இந்தப் பேச்சு குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ராகுல்காந்தியின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பதில் கொடுத்துள்ள தமிழக அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ராஜீவ்காந்தி கொலையாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல்காந்தி கூறி இருக்கிறார்.
இலங்கையில் 1.5 லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்தபோது தமிழர் இனத்தையே மொத்தமாக இலங்கையில் அழிப்பதற்கு காரணமாக அன்றைக்கு இருந்தது காங்கிரஸ் அரசும், அதன் கூட்டணியான தி.மு.க. ஆட்சியும்தான். இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டதற்கு அவர்கள்தான் காரணம். எனவே ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களை அழித்து விட்டு இப்போது அதை பெருந்தன்மை என்று சொல்கிறார் என்றால் இது எப்படி இருக்கிறது என்று நினைத்துப் பாருங்கள்… என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ராகுல் கூறுவதை கமல்ஹாசன் ஆதரிக்கிறாரே என்று கேட்டபோது, ராகுல் கூறுவதை கமல் ஆதரிக்கிறார் என்றால் தமிழர்களை படுகொலை செய்த திமுக.,வை பெருந்தன்மை என்கிறாரா? அல்லது காங்கிரசை பெருந்தன்மை என்கிறாரா? அல்லது இதை நியாயப்படுத்துகிறாரா? என்று பதில் கேள்வி கேஎட்டார்.
தொடர்ந்து, அப்படியென்றால், ராகுல் இதில் அரசியல் செய்வதாகக் கருதுகிறீர்களா? என்று கேட்டபோது, அங்கே எல்லோரையும் அழித்து விட்ட பிறகு அவர் சொல்வதைப் பார்க்கும்போது அரசியலுக்காகத்தான் சொல்கிறார் என்று தோன்றுகிறது. வேறு எதற்காக என்று சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்து, பல மட்டங்களில் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில், பாஜக., தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், “2 லட்சம் தமிழர்களைக் கொன்ற போது மௌனமாக இருந்தது ஏன்?” என ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.



