சேலம் சிவனடியார் சரவணன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தமிழக காவல் துறையினர் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ.,யை காப்பாற்றும் முயற்சியில், மேலும் மேலும் தவறுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறப் படுகிறது. சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை மிரட்டி, பொய்யாக அவர்களே புகார் தயாரித்து, ஏற்கெனவே உடலால் செத்துப் போன ஒருவரின் நற்பெயரைக் குலைத்து மீண்டும் சாகடிக்கும் கொலைக்குற்றத்தை போலீஸார் செய்து கொண்டிருப்பதாக இந்த விவகாரத்தில் நேரடியாக விசாரிக்கச் சென்ற குழுவினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து, உண்மை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம், தாம் நேரில் பார்வையிட்ட விவரங்கள் குறித்து மாநிலச் செயலாளர் V.S.செந்தில்குமார் அறிக்கை ஒன்றினை அளித்துள்ளார்..
அந்த அறிக்கை: சேலம் மாவட்டம் புளியம்பட்டி கிராமம் புல்லா கவுண்டம்பட்டி அக்ரகாரம் பஞ்சாயத்து குண்டக்கல் காடு என்ற பகுதியில் சரவணன் என்ற சிவனடியார் மைக்கேல் அந்தோணி என்ற காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதால் மனமுடைந்து வாக்குமூலம் வீடியோ வாக பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்திகள் சமூக வலைத் தளைங்களில் வந்து கொண்டிருக்கிறது.
அதன் அடிப்படையில் அந்த சிவனடியார் குடும்பத்திற்கு ஆறுதல் கூற இந்து முன்னணி இயக்கத்தின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், அவரது வீட்டிற்கு நேரில் சென்றார்கள். அங்கு அவரது மனைவி மற்றும் குழந்தைகள் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பகுதி மக்கள் சிலர் மாநிலத் தலைவரை சந்தித்தனர். அங்குள்ள மக்கள் சொல்கின்ற விஷயங்கள் பல நமது மனதில் ஐயப்பாடுகளை ஏற்படுத்துகிறது.
அந்த ஊர் மக்கள் சொன்ன விஷயங்களின் அடிப்படையில், மாநிலத் தலைவரோடு உடன் சென்று விஷயங்களை சேகரித்த வகையில் கீழ்க்காணும் விஷயங்களை அறிக்கையாக சமர்பிக்கிறேன் –
1.அந்த தேவூர் – குண்டக்கல் காடு என்கிற பகுதியில் கிறிஸ்தவ மதமாற்றம் பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது எனவும் அந்தப் பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றை கிறிஸ்தவர்கள் நடத்திக் கொண்டு அதன் மூலமாக இருக்கக்கூடிய புறம்போக்கு நிலங்களை எல்லாம் மக்களுக்கு வீடு கட்டுவதற்கு அனுமதி வாங்கித் தருகிறோம் என்று கூறி பொய் சொல்லி மதம் மாற்றி அந்தப் பகுதியில் மதம் மாற்றப்பட்டவர்களை மட்டுமே திட்டமிட்டு குடியேற்றி வருகிறார்கள் எனவும் மக்கள் சொல்கிறார்கள்
2.இந்த நிலையில் தேவூர் காவல் நிலையத்திற்கு மைக்கேல் அந்தோனி என்ற உதவி ஆய்வாளர் இடம் மாறுதல் பெற்று வந்தார். அவர் கிறிஸ்தவத்தின் மீது ஆழமான நம்பிக்கை உடையவர், மதபோதகர் என்றெல்லாம் அறிந்து அவரை வைத்து, சிவனடியார் சரவணன் செயல்பாட்டை விரும்பாதவர்கள் தவறான, பொய்யான புகாரை கூறியுள்ளனர் என்று அங்குள்ள சிலர் கூறுகிறார்கள். (உதவி ஆய்வாளர் அவர்களின் முகநூல் பக்க விவரங்கள் அதை மெய்ப்பிப்பதாகவே உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.)
3.எழுத்துபூர்வமாக எந்தவித புகாரும் இல்லாமலேயே உதவி ஆய்வாளர் அந்தோணி தன்னிச்சையாக சென்று அங்கு சரவணனை அடித்து துன்புறுத்தி இருப்பதாக தகவல்கள் சொல்கிறார்கள்.
4.மேலும் அவர் அந்த சம்பவத்தன்று விடுமுறையில் இருந்திருக்கிறார் என்ற செய்தியை அறிகிறோம். விடுமுறையில் இருக்கக்கூடிய ஒரு ஆய்வாளர் இந்த வேலையில் ஈடுபட்டார் என்பது மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனபதும் மக்கள் கருத்து.
5.மேலும் சிவனடியாரின் உறவினரென்று சொல்லிக் கொண்டு சிலர் அங்கு உள்ளனர். இவர்களை காவல்துறை நியமித்துள்ளனர் என்றும் கூறுகிறார்கள்.
6.இந்த சந்தேகம் நமக்கே ஏற்படுகிறது/ ஏனெனில் தற்போது அங்கு அவரது மனைவி மற்றும் குழந்தைகள் காணப்படவில்லை. அவர்களை வேறு எங்கோ , யாரோ அழைத்துச் சென்று விட்டதாக அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள் . அதாவது கிட்டத்தட்ட கடத்தப்பட்டு இருப்பது போல தோன்றுகிறது.
7.அங்கு சில காவலர்கள் மப்டியில் இருந்து கொண்டு வருபவர்களை மிரட்டுவதாகவும் மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கிறார்கள்.
8.மேலும் சில அரசியல்வாதிகள் தங்களது சந்துக்கடை (சட்டவிரோத டாஸ்மாக் – சாரயக்கடை) சீராக நடக்க வேண்டும் என்பதற்காகவும் , மணல் கொள்ளை தடையின்றி நடைபெற வேண்டும் என்பதற்காகவும் காவல்துறைக்கும், அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக நடந்த விஷயத்தை மூடி மறைக்கிறார்கள் என்று தகவல்கள் கூறப்படுகின்றன..
9.சிவனடியார் மீது புகார் கொடுத்தவர்கள் மீது ஏற்கெனவே கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன என்பதும் இந்த தற்கொலை விஷயத்தில் மிகப் பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது என அங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.
10.பல சட்டவிரோத செயல்களுக்கு மறைமுகமாக காவல்துறை உதவி செய்வதால், காவல்துறை சொல்வதை இவர்கள் செய்கிறார்கள் என்பது மக்கள் கருத்து .
இந்தத் தகவல்களின் அடிப்படையில், தேவையெனில் இவற்றை விரிவாக விசாரிக்க இந்து முன்னணியின் வழக்கறிஞர் பிரிவான இந்து வழக்கறிஞர் முன்னணி சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கலாம் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தக்க நீதி கிடைக்க வேண்டும், ஆகவே உண்மை நிலையை கண்டறிய விசாரணையை முதலிலிருந்து வேறு ஒரு துறையின் மூலம் நடத்தலாம் எனவும், காவல்துறை அதிகார துஷ் பிரயோகம் செய்துள்ளதா என்பதை முறையாக விசாரிக்கவேண்டும் எனவும், அரசு இந்த விஷயங்களை உடனடியாக கவனிக்காவிட்டால், உண்மை கண்டறியும் குழுவினரின் அறிக்கைக்குப் பிறகு அதன் அடிப்படையில் தீவிர போராட்டங்களை முன்னெடுப்பதைப் பற்றியும் ஆலோசிக்கலாம் எனவும் கூறி இந்த அறிக்கையை சமர்பிக்கிறேன்… என்று இந்து முன்னணி மாநிலச் செயலாளர் செந்தில் குமார் தெரிவித்திருக்கிறார்.