கோவையில் முதியவர்களை தாக்கி கொள்ளையடித்த இன்ஸ்டாகிராம் காதல் ஜோடி..

Published:

பொதுஅறிவு புத்தகம் விற்பது போல் ஊருக்குள் புகுந்து வயதானவர்களைத் தாக்கி வீட்டுக்குள் கட்டிப் போட்டு கொள்ளையடித்த இன்ஸ்டாகிராம் காதல் ஜோடியை ஊர்மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி அடுத்த பொம்மணாம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் 80 வயதான பெரிய ராயப்பன் தனது மனைவி ராஜம்மாளுடன் வசித்து வந்தார். இவர்களது மகன் சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டனர். வீட்டில் கணவன் மனைவி மட்டுமே வசித்து வந்தனர்.சம்பவத்தன்று ராஜம்மாள் மருத்துவமனைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சுமார் 2 மணியளவில் கையில் பொது அறிவு புத்தகத்துடன் முதுகில் பை ஒன்றை மாட்டிக் கொண்டு இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுடன் பெரிய ராயப்பன் வீட்டுக்கு சென்று தாகமாக இருப்பதாக கூறி குடிக்க தண்ணீர் கேட்டு உள்ளனர். தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்ற முதியவரை பின் தொடர்ந்து சென்று வீட்டிற்குள் அவரை மடக்கி பிடித்து இருகைகளையும் கட்டி , வாயில் பிளாஸ்டரை சுற்றி சமையல் அறையில் தள்ளி விட்டு உள்ளனர். அதை தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோ மற்றும் பல இடங்களில் பணம் நகைகளை தேடி வீட்டை அலாசியுள்ளளனர். நீண்ட நேரத்திற்கு பின் வீட்டில் கிடைத்த பொருட்களை கொள்ளை அடித்து விட்டு வீட்டின் பின் கதவு வழியில் வெளியேறி உள்ளனர்.

அப்பொழுது சென்னையில் இருந்து வந்த முதியவரின் மருமகள் சங்கீதா, வீட்டின் பின் பக்கமாக சென்ற அந்த கொள்ளைக்கார இளஞ்ஜோடியை பிடித்து விசாரித்த போது இருவரும் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். சங்கீதா திருடன் திருடன் எனக் கூச்சலிட்டதால் ஊரே திரண்டு அவர்களை விரட்டி உள்ளது. அந்த திருட்டு ஜோடியில் ஓட இயலாத பெண் ஒரு புதரில் பதுங்கி இருந்த போது வசமாக சிக்கினார். தன்னுடன் வந்த பெண் பிடிபட்டதை கண்ட அந்த இளைஞர் தானாக திரும்பி வந்து பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டார். வீட்டிற்குள் ராயப்பன் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்து ஆவேசமான மக்கள், சிக்கிய இருவரின் கைகளை கயிற்றால் கட்டி தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடவள்ளி போலீசார் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அந்தப் பெண் திருச்சியை சேர்ந்த தேவராஜ் மகள் சிங்கா நல்லுர் செண்பகவள்ளி என்பதும், அந்த இளைஞர் கிருஷ்ணகிரியை சேர்ந்த ‘திருடன்’தினேஷ்குமார் என்பதும் தெரிய வந்தது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலில் விழுந்த இவர்கள், உல்லாசமாக ஊர் சுற்றுவதற்காக வயதான முதியவர்களை ஏமாற்றி அவர்களின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி நகை பணத்தை களவாடி கைவரிசை காட்டி வந்தது தெரியவந்துள்ளது. பட்டதாரிகளான இவர்கள் கொள்ளை அடிப்பது எப்படி என்று யூடியூப் வீடியோ பார்த்து பயிற்சி எடுத்ததோடு, அதற்கு என்றே கூர்மையான ஆயுதங்களான சுத்தி , கயிறு , பிளாஸ்டர் , உலி , திருப்புலி உள்ளிட்டவற்றை வாங்கி பையில் போட்டுக் கொண்டு வீடுபுகுந்து கொள்ளை அடித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

திருடன் தினேஷ்குமாரின் இருசக்கர வாகனத்தை கைப்பற்றிய போலீசார் அவனிடம் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட நம்பர்பிளேட்டுக்களை பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் புத்தகம் விற்பது போல ஒரு ஊருக்குள் நுழைந்து ஒரு வாரம் நோட்டமிட்டு ஆள் நடமாட்டம் அறிந்து கொள்ளையடிப்பது வழக்கம் என்றும் வேறு எங்கெல்லாம் இந்த திருட்டு ஜோடி கைவரிசை காட்டி உள்ளது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

images 65 1 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img