ஜெனகை மாரியம்மன் தேர்த் திருவிழாவில், பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி நான்கு ரத வீதி வந்து கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்..
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா அரசு உத்தரவின் பேரில் மிகக் கட்டுப்பாடுடன் பக்தர்கள் இல்லாமல் கோவில் வளாகத்தில் நடந்து வருகிறது.
இத்திருவிழாவின் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு தேரில் பவனி வருவது போல் அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார்.
செயல் அலுவலர் இளமதி, சண்முகவேல் பூசாரி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர். முக்கிய திருவிழாவான தேர் திருவிழாவை முன்னிட்டு, சோழவந்தான் மற்றும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் தங்களது குழந்தைகளை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வேப்பிலை மற்றும் தேங்காய் எடுத்து நான்கு ரத வீதியில் வலம் வந்து கோவில் முன்பாக உள்ள மூன்று மாத கொடிக்கம்பத்தில் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினார்கள்.
சிலர் வெளியே இருந்தபடியே முடி காணிக்கை செலுத்தினர். ஆங்காங்கே ரோட்டில் இருந்தபடி பெண்கள் மாவிலக்கு எடுத்து தாங்களாவே அம்மனை நினைத்து வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி பூஜைகள் செய்து அம்மனை நினைத்து வணங்கினார்கள்.
இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடக்காமல், இப்பகுதி உள்ள பக்தர்கள் கவலையுடன் காணப்பட்டனர். வந்திருந்த பக்தர்கள் அடுத்த ஆண்டாவது கொரோனா இல்லாத ஆண்டாக அமைய வேண்டும் கோவில்களில் முழுமையான நிகழ்வு நடைபெற வேண்டுமென்று வேண்டிக்கொண்டனர்.