
தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் வழக்குரைஞர் ஒருவர் மர்ம நபர்களால் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரம் பகுதியைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு மகன் முத்துக்குமார் (43). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நகை கடன் வழங்கும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்நிலையில், இவர் புதன்கிழமை மதியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனது நிதி நிறுவனத்தில் இருந்தாராம். அப்போது, அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள், முத்துக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், தற்போது கொலை செய்யப்பட்ட முத்துக்குமாரின் சகோதரர் சிவக்குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தூத்துக்குடி நீதிமன்றத்தின் அருகே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முத்துக்குமார் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
எனவே, இதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், இது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது சகோதரர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ராஜேஷ் மற்றும் முத்துக்குமார் குடும்பத்தினருடைய முன் விரோதம் இருந்துள்ளது இதை அடுத்து 2019 ஆம் ஆண்டு முத்துக்குமாரின் தம்பி சிவக்குமார் தூத்துக்குடி நீதிமன்றம் அருகே வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் வழக்கறிஞர் முத்துக்குமார் நீதிமன்றத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சோரிஸ் புரத்தில் உள்ள தனது நகை அடகு கடைக்கு காரில் வந்துள்ளார். அப்போது காரிலிருந்து இறங்கும் போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கீழே இழுத்துப் விட்டு, விரட்டி அவரது அலுவலகம் முன்பு கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று முத்துக்குமார் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




