நெல்லை:
இலங்கை போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு நீதி விசாரணை நடத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்- என்று நெல்லையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசினார்.
இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க பிற நாடுகளை வலியுறுத்த வேண்டும்; இலங்கை அரசு நடத்திய போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு நீதி விசாரணைக்கான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா முன்வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை புறநகர், மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கிப் பேசினார். அப்போது,
இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை அவசியம் வேண்டும். சுதந்திர தமிழ் ஈழம் அமைய வேண்டும். அதற்கு இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் உலகம் எங்கும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும், தமிழ்நாட்டில் அகதிகளாக உள்ள 65 ஆயிரம் ஈழத் தமிழர்களிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்கக்கூடாது.
ஈழத்தமிழர் விடுதலைக்காக முத்துக்குமார் தீக்குளித்து உயிர்நீத்தபோது நடந்த கூட்டத்தில், மத்திய அரசை விமர்ச்சித்தும், பிரபாகரனை பற்றியும் பேசக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கூறினார். தனது மகன் மத்திய அமைச்சரவையில் இருந்ததால் அவர் அப்படி கூறினார். மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தி.மு.க.வும் இது பற்றி பேசவில்லை.
இலங்கையில் நடந்த போர்குற்றங்கள் குறித்த மனித உரிமை கமிஷனின் 268 பக்க அறிக்கையை படித்து பார்த்தேன். அப்போதைய ராணுவ மந்திரி மைத்ரிய ஸ்ரீபாலசேனா, ராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியவர்களும், தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்கள்தான். அவர்கள் கண்முன்பே ஈழத்தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால், அவர்களுக்காக போராடும் இயக்கம் ம.தி.மு.க. மட்டுமே. ம.தி.மு.க.வில் இருந்து சிலரை தி.மு.க.வுக்கு கருணாநிதியும், ஸ்டாலினும் இழுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் அங்கு சென்ற பின்புதான், ம.தி.மு.க. மீண்டும் எழுச்சி பெற்று உள்ளது. இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இது ஏழரை கோடி தமிழர்களின் உணர்வை பிரதிபலிக்கும் தீர்மானம். அந்த தீர்மானத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும். அதுபற்றி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு எடுத்துச் சென்று, பன்னாட்டு நீதி விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும்.
ஈழ தமிழர்களின் பிரச்சினைக்கு உலக நாடுகள் தீர்வு தராது. நாம் உலக நாடுகளிடம் நீதி கேட்கவேண்டாம். நாமே நீதியை பெறவேண்டும். இதற்கு தமிழகத்தில் உள்ள 10 லட்சம் இளைஞர்கள் கட்சியை மறந்து தமிழர் என்ற உணர்வுடன் களத்தில் இறங்கி போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். உடனே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்வு காணப்படும். ஈழ தமிழர்களின் உரிமைக்காக நான் தொடர்ந்து போராடுவேன்.
– என்று வைகோ கூறினார்.


