சென்னை:
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவின் இணைப் பேராசிரியர் கே.பி.திருமாறன் (47), ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென காலமானார்.
தி.நகரில் உள்ள தனது கிளினீக்கில் நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார். இவருக்கு காது-மூக்கு-தொண்டை மருத்துவரான மனைவி தேவி, மகன், மகள் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரரும், முடநீக்கியல் மருத்துவருமான மணிமாறன் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பிரேத பரிசோதனை சென்னை அரசு பொது மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பிறகு உடல் இறுதிச் சடங்குக்காக சொந்த ஊரான தென்காசிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
திருமாறனின் மறைவுக்கு சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.



