சிவபிரதோஷம்
சிவனே உயிர்கள் அனைத்தும்
(மீ.விசுவநாதன்)

ஏதோ ஏதோ தேடுகிறேன் – அது
எதிர்வந்த போதோ ஓடுகிறேன் !
தீதோ நன்றோ தெரியாமல் – சினத்
தீப்பிடியில் சிக்கி வாடுகிறேன் !

தேதி கிழிக்கும் போதினிலே -நாள்
தேய்ந்தங்கு போன நிலையறிந்தேன் !
பாதி கிணறு தாண்டித்தான் -சிவன்
பாதத்தின் பெருமை உணர்ந்திட்டேன் !

கண்கள் தெரியும் போதினிலே -சிவனைக்
காணாமல் வாழ்தல் சரியாமோ ?
மண்ணில் வந்த பதிவுக்கு -சிவ
மானபொரு ளன்பு புரியாதோ ?

நட்சத் திரங்கள் எல்லாமே – சிவ
நாட்டியத்தின் வெளிச்ச விழியன்றோ !
வெட்ட வெளியின் ஒலியின்பம் – அவன்
வேதத்தின் நுட்ப மொழியன்றோ !

சிவனே உயிர்கள் அனைத்துமென – என்
சிந்தைக்குள் ஒளியாய் வரவேண்டும் !
யமனே வந்து நின்றாலும் – அன்பு
அரனேதா னென்ற மனம்வேண்டும் !

( வாய்பாடு: மா,மா,காய், காய்,மா, காய்)
(இன்று சனிப் பிரதோஷ தினம் : 06.02.2016)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending