இந்தி மொழி திணிப்பை தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
அன்மையில் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 37வது கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
அப்போது அவர் நாட்டில் வெவ்வேறு மொழிகளை பேசும் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும் போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது எனவும் தெரிவித்திருந்தார்.
அமித்ஷா பேச்சு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பாஜகவும் தமிழகத்தில் இந்தி திணிப்பை விரும்பவில்லை என்றார் .மேலும் அவர் தெரிவித்தபோது இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டுமானால் தமிழ் பள்ளிகளை திறக்க மாநில முதல்வர்களுக்கு அரசு கடிதம் எழுத வேண்டும் என்று கூறினார். இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்தை பாஜக வரவேற்கிறது. தமிழ் மொழி இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்பது பாஜகவை பொறுத்தவரை பெருமைக்குரிய ஒன்று என கூறினார். தற்போதைய சூழலில் 5 மொழிகளையாவது மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தமிழ், ஆங்கிலத்துடன் கூடுதல் மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். கூடுதலாக மொழிகளை கற்றுக் கொண்டால் நல்லதுதானே எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.





