
தமிழக அரசியல், இதுவரை கண்டிராத ஒரு சட்டச் சிக்கலில் சிக்கியிருக்கிறது. அதற்குக் காரணமானவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். “தனிப்பெரும் கட்சிக்குத்தான் ஆட்சி அமைப்பதில் முன்னுரிமை” என்பது ஜனநாயக மரபு. அப்படித்தான் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் முதல் முன்னுரிமை அடிப்படையில் அழைக்கப்பட்டிருக்கக் கூடும் ஆனால், விஜய் தரப்பு செய்த ஒரே ஒரு ‘நிர்வாகத் தவறு’ தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது.
ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
சட்டசபைத் தேர்தலில் 107 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக தவெக., நின்றபோது, விஜய் அமைதியாக இருந்திருக்கலாம். ஆளுநர் அழைக்கும் வரை காத்திருந்து, பிறகு சட்டசபையில் தனது பலத்தை நிரூபித்திருக்கலாம். அல்லது நான்தான் பெரிய கட்சி என்று சொல்லி இருக்கலாம். ஆனால், ஆளுநர் மாளிகையில் அவர் சமர்ப்பித்த அந்த ஆதரவுக் கடிதம்தான் இப்போது அவருக்குப் பெரும் வினையாக முடிந்துள்ளது.
தன் 107 எம்.எல்.ஏ-க்களுடன் காங்கிரஸ் கட்சியின் 5 பேரைச் சேர்த்து மொத்தம் 112 பேர் எனச் சொல்லி, கூட்டணியாக அவர் கணக்குக் காட்டியது, அவராகவே தனது பலவீனத்தை ஒப்புக்கொண்டது போல் ஆகிவிட்டது. “உங்களிடம் 118 பேர் இல்லை என்பது உங்கள் கடிதத்திலேயே தெரிகிறது, பிறகு எப்படி உங்களை ஆட்சி அமைக்க அழைக்க முடியும்?” என்ற ஆளுநரின் கேள்விக்கு விஜய்யிடம் பதில் இல்லை.
ஒருவேளை விஜய் இவ்வாறு ஆதரவுக் கடிதமே தராமல் இருந்திருந்தால் கூட, ஆளுநர் அவரைத் தனிப்பெரும் கட்சித் தலைவராகப் பார்த்திருப்பார். ஆனால், விஜய் தானாகவே முன்வந்து கூட்டணிக் கணக்கைக் காட்டியதால், “ஏன் 118 வரவில்லை?” என்ற கேள்வியை ஆளுநர் எழுப்ப வழிவகை செய்துவிட்டார். 112 என்பது ஆட்சியமைக்கத் தேவையான 118-ஐ விட 6 இடங்கள் குறைவு என்பதால், “முழு பெரும்பான்மை இல்லாத ஒருவரை எப்படி அழைப்பது?” என்பது ஆளுநர் தரப்பு வாதமாக மாறிவிட்டது.
இதற்கு திடீரென்று எஸ்.ஆர். பொம்மை வழக்கைக் காரணம் கூறி சிலர் ஆளுநருக்கு எதிராக கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பொம்மை வழக்கின் தீர்ர்பு என்பது, அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்துவது குறித்துப் பேசுவது. பொம்மை (1994) வழக்கின் தீர்ப்பு, “ஒரு அரசின் பெரும்பான்மையை ஆளுநர் மாளிகையில் தீர்மானிக்கக் கூடாது, சட்டசபையில்தான் (Floor Test) தீர்மானிக்க வேண்டும்” என்கிறது.
இந்த பொம்மை வழக்கின் தீர்ப்பை வைத்துதான் விஜய் தரப்பு நீதிமன்றத்தை அணுகத் திட்டமிட்டது. ஆனால், பொம்மை வழக்கின் சாராம்சம், ஏற்கெனவே ஆட்சியில் இருக்கும் ஒரு முதலமைச்சரின் பெரும்பான்மையைப் பற்றியது. அல்லது தனிப் பெரும் கட்சி பற்றியது. ஆனால், புதிய அரசு அமையாத நிலையில், ஒருவரை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு முன்னரே அவரிடம் பெரும்பான்மை இல்லை என்பது ஆளுநருக்கு ஆவண பூர்வமாகத் தெரிந்துவிட்டால், ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அழைக்க மறுக்கலாம். இங்கே அந்த ஆவணம், விஜய் தரப்பே அளித்த கூட்டணி ஆதரவுக் கடிதம்.
அவ்வகையில், விஜய் நீதிமன்றம் சென்றால், “நான் தனிப்பெரும் கட்சியின் தலைவர், என்னை ஏன் அழைக்கவில்லை?” எனக் கேட்கலாம். ஆனால், ஆளுநர் தரப்பு விஜய்யின் 112 பேர் ஆதரவு கடிதத்தைக் காட்டி, “மனுதாரரே தனக்கு 118 பேர் இல்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். நிலையற்ற ஒரு அரசை அமைக்க அனுமதிப்பது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும்” என்று வாதிடலாம்.
கர்நாடகா, கோவா மாநில வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின்படி, ஒரு கூட்டணிக்குத் தெளிவான பெரும்பான்மை இருக்கும்போது, தனிப்பெரும் கட்சியை விட அந்தக் கூட்டணிக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது தெளிவு. இங்கே விஜய் காட்டிய 112 என்ற எண்ணிக்கை, அவரிடம் பெரும்பான்மை இல்லை என்பதை உறுதிப்படுத்துவதால், ஆளுநரின் முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பாது.
இப்போது விஜய்க்கு இருக்கும் ஒரே வழி, வி.சி.க, சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ போன்ற கட்சிகளிடம் இருந்து அந்த மீதமுள்ள 6 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்று, புதிய கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பிப்பதுதான். ஆனால், விசிக., ஐயுஎம்எல் மற்றும் கம்யூனிஸ்ட்கள் தாங்கள் திமுக., எடுக்கும் முடிவைப் பின்பற்றுவதாகக் கூறின. எனினும் கம்யூனிஸ்ட்களும், விடுதலைச் சிறுத்தைகளும் தவெக., தரப்பு தங்களிடம் ஆதரவு கேட்டு பேசியதாகவும் விரைவில் முடிவு எடுப்பதாகவும் கூறின. அதே நேரம், ஆளுநரை கைகாட்டி, விஜய் அரசமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும், அவர் இதைத் தடுக்கக் கூடாது என்று குற்றம் சாட்டுகின்றன. ஆனால், இதைச் சொல்லும் நீங்கள், விஜய்க்கு காங்கிரஸைப் போல் ஆதரவுக் கடிதத்தை அளிக்க வேண்டியதுதானே என்று கேட்கிறார்கள் மக்கள்.
இப்படி பரபரப்பான சூழலில், விஜய்க்கு வாய்ப்புக்கு மேல் வாய்ப்பு கொடுத்து ஆளுநர் அவரிடம் மீண்டும் மீண்டும் அழைத்து விளக்கம் கேட்கிறார், கொடுக்கிறார். எனினும், ஆளுநரை வில்லனாக்கி, உண்மையில் வில்லன்களாகத் திகழும் விசிக., கம்யூனிஸ்ட்கள் போன்றவை மக்கள் பார்வையில் இருந்து தப்பிக்கவே பார்க்கின்றன.




