கோவை ஆனைகட்டியில் பிரசித்தி பெற்ற ஆர்ஷவித்யா குருகுல ஆசிரமம் உள்ளது. இதனை நிறுவி நடத்தி வந்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி 1930–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15–ந் தேதி திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் பிறந்தார்.. அவருக்கு வயது 85.
1962–ம் ஆண்டு சுவாமி சின்மயானந்தரிடம் சன்னியாசம் பெற்றார். 1990–ம் ஆண்டு கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் ஆர்ஷ வித்யா குருகுலத்தை தொடங்கினார்.
மேலும் ரிஷிகேஷ், நாகபுரி மற்றும் அமெரிக்காவில் உள்ள செய்லர்ஸ்பர்க் ஆகிய இடங்களிலும் ஆசிரமங்களை நிறுவி வேதாந்தம் கற்றுக்கொடுத்தார்.
இங்கு பயின்ற 200–க்கும் மேற்பட்ட சன்னியாசிகளும், மாணவர்களும் உலகின் பல்வேறு நாடுகளில் வேதாந்தத்தைப் போதித்து வருகின்றர்.
ஏழை மாணவ– மாணவிகளுக்கு உதவ நாடு முழுவதும் 120 இடங்களில் ‘எய்ம் பார் சேவா’ என்ற பெயரில் இலவச விடுதிகளை தொடங்கி நடத்தி வந்தார்.
இவர் ஆன்மிக பணி மற்றும் சமுதாய பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதனால் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் அன்பை பெற்றவராக விளங்கினார்.
கடந்த சில மாதங்களாக நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தயானந்த சரஸ்வதி சுவாமி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில் உள்ள ஆசிரமத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த நிலையில் அவர் நேற்று இரவு 10.20 மணிக்கு மரணமடைந்தார். ஆசிரம நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இன்று காலையும் ஏராளமானோர் ஆசிரமத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமியின் உடல் அடக்கம் நாளை (வெள்ளிக்கிழமை) ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்தில் நடைபெறுகிறது. தனக்கு சமாதி அமைப்பதற்கான இடத்தை தயானந்த சரஸ்வதி சுவாமிகள் கடந்த 2 மாதத்துக்கு முன்பே தேர்வு செய்து கொடுத்தார். அந்த இடத்திலேயே உடல் அடக்கம் நாளை நடைபெறுகிறது.