வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதான் மீண்டும் முதல்வராவார் என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழருவி மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:–
ராகுல் காந்தியை போலவே, ஸ்டாலினும் மக்களை சந்திப்பதை போல் நாடகமாடி வருகிறார். 5 முறை ஆட்சிப்பொறுப்பில் இருந்த தி.மு.க.வுக்கு மக்கள் பிரச்சினை என்ன என்பது பற்றி தெரியும். இருந்தபோதும், மக்களை சந்திப்பதுபோல் அவர்களை ஏமாற்றும் வேலையில் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.வரும் சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கவேண்டும் என்றகனவோடு இருக்கின்றனர். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாது. ஏனென்றால், ஊழலின் பிறப்பிடமே தி.மு.க. ஆட்சியில் தோன்றியதுதான். அதைத்தான் பலரும் பின்பற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த நினைத்தால் தி.மு.க.வுடன் மற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து செயல்பட வேண்டும். ஆனால், அது நடக்காது. காரணம், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சித்தலைவர்கள் அனைவருமே முதல்வர் கனவில் உள்ளனர். ஆகவே அவர்கள் தி.மு.க.வுடன் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.
ஆகவே விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வரும் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்து மீண்டும் முதல்வராக ஜெயலலிதாவே வருவார்.தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது அவசியமான ஒன்றாகும் என அவர் கூறினார்.