ராமநாதபுரம் மாவட்ட ஏ. டி.எஸ்.பி. வெள்ளதுரை அவரது கீழ் நிலையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு
வெளிப்படையாக வயர்லெஸ் மூலம் சில நாட்களுக்கு ஒரு ஆணையிட்டார். அந்த ஆணையில் அவர் தெரிவித்தாவது..
போலீஸை பற்றி அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி எவரும் பேச கூடாது. முக்கியமாக அரசியல் வாதிகள்
எவரேனும் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும்.
போலீஸை கண்டாலே அரசியல் வாதிகளுக்கு பயம் வரும் அளவிற்க்கு நெத்தியடியாக நடவடிக்கை இருக்க வேண்டும் என வெள்ளதுரை தெரிவித்து இருந்தார். அவர் வயர்லெஸ் மூலம் பேசிய பேச்சு பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்கள் மூலம் வெளியாகி தற்போது பெரும் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று 24ம் தேதி விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் வாதிகளை பற்றி அவதுறாக பேசிய ஏ. டி.எஸ்.பி. வெள்ளதுரை மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் அவர் திருச்செங்கோடு டி.எஸ்.பி.,விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்கில் சிபிசிஐடியின் விசாரணை போதாது. சிபிஐ விசாரணை நடத்தினால் தான் சரியாக இருக்கும். கோகுல்ராஜ் கொலை வழக்கிலேயே பல சந்தேகங்கள் உள்ளன. அந்த வழக்கை விசாரித்த டிஎஸ்பி.,யும் தற்கொலை செய்து கொண்டுள்ளது சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 72 ஜாதி ஆவண கொலைகள் நடைபெற்றுள்ளன. இதனை தடுக்க தனி சட்டம் அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.