உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது. அழிவின் விழும்பில் பனை மரங்கள் தமிழகத்தில்  உள்ளது என்பதே இயற்கை ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.!

கள் இறக்குவதற்கான அனுமதி இருந்த வரை, அதனால் வருமானம் கிடைத்தவரை பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. அதன்பிறகு, பனை மரங்களை கைவிட்டு விட்டனர் விவசாயிகள். வறட்சி காரணமாக பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடிதான் உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. பனையில் ஆண், பெண் என 2 வகை உள்ளன. பெண் பனையை பருவப் பனை என்றும், ஆண் பனையை அழகுப் பனை எனக் குறிப்பிடுவது வழக்கம். பனை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 15 அடி உயரம் வரை வளர்க்கிறது. இந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பூ பூக்கும். அப்போது தான் ஆண் பனை, பெண் பனை எது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

கார்த்திகைத் திருநாளில் ஆண் பனையிலிருந்து பாலைகளை வெட்டி குழி தோண்டி தீ வைத்து மூட்டம் போட்டு கரியாக எடுத்து உரலில் இடித்து துணிப்பையில் வைத்து மாவலி சுற்றுவது இளைஞர்களின் வழக்கமாகும். பனை ஓலை குருத்துகளைப் பிரித்தெடுத்து, பகலில் வெயிலிலும், இரவில் பனியிலும் பதப்படுத்தும் முன்பாக ஓலையின் நடுப்பகுதியில் உள்ள ஈக்கியுடன் ஓலையைப் பிரித்தெடுத்தும் ஈக்கியில்லாத ஓலையைத் தனியாக பிரித்து எடுத்து நுட்பமாகப் பயன்படுத்தி உள்ளனர்.

அரைப்படி முதல் 5 படி வரை கொள்ளவு கொண்டவை கொட்டான்கள் எனவும், 7 படியிலிருந்து 11 படி வரை கொள்ளளவு உள்ள பெட்டி வகைகள் சீர்வரிசைப் பெட்டிகள் எனவும், 20 படியிலிருந்து 30 படிகள் வரை கொள்ளளவு கொண்ட நார்பெட்டிகள் அரைப்பெட்டிகள் என்றும், 5 மரக்கால் அளவுள்ள பெரிய நேர்த்தியான நார்பெட்டிகள் கடகம் என்றும், நெல் இதர தானியங்களை காற்றில் தூற்றி தரம் பிரிக்கப் பயன்படுத்துபவை தூற்றுப் பெட்டிகள் என்றும், தானியங்களை புடைத்து எடுக்க சொழகு அல்லது முறம் என்றும் சரக்குகளை கட்டி அனுப்ப பனைப் பாய்கள் என அழைத்து அதனைப் பயன்படுத்தி வந்தனர்.

இதைத் தவிர, மட்டையிலிருந்து நார் எடுத்து மெத்தைகள், பிரஷ்கள், ஆடைகள், கால்மிதிகள், வீட்டு அழகு சாதனப் பொருள்களும் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பதனீர் குடிப்பதால் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் விருத்தியாகும், நோய் உண்டாக்கும் கிருமி தொற்றுகளைத் தடுக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.

பனை விவசாய அழிவுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சொந்த மரமில்லாததால் பனைமரம் ஏறியவர்கள் வேறு தொழிலுக்குச் சென்று விட்டனர். சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பூமியின் வறட்சி காரணமாகவும், சீமைக் கருவேல் மரங்களின் எல்லையில்லா வளர்ச்சி காரணமாக பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில், எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பனைமரங்கள் வெட்டப்பட்டு, செங்கல் சூளைக்கு எரிபொருளாக லாரிகளில் அனுப்பப்பட்டு வருகின்றன என்றார்.

திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக் கொள்வர் பயன் தெரிவார் -என்ற குறளின்படி எந்தவித செலவுமின்றி வளர்ந்து நிற்கும் சில கோடி மனை மரங்களையாவது பாதுகாக்க வேண்டும். பனையின் பயனைப் பெற புதிய வழிகளை உருவாக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழர்களின் அடையாளமாக உள்ள பனை மரத்தை அழிவின் விளிம்பிலிருந்து மீட்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending