1.84 லட்சம் நீதிமன்ற வழக்குகளை வாபஸ் பெற்ற மத்திய பிரதேச அரசு

Published:

‘மத்திய பிரதேச அரசு கோர்ட்டில், வழக்குகள் முடங்கிக் கிடக்கின்றன’ என, வெறுமனே சொல்லிக்கொண்டிருக்காமல், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மாநில கோர்ட்டுகளில் முடங்கிக் கிடந்த வழக்குகளில், 1.84 லட்சம் வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது, இதன்மூலம், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதுடன்,நீதிபதிகளின் பணிச்சுமையும் குறைந்து உள்ளது.ம. பி அரசின் புது முடிவை தொடர்ந்து பிற மாநிலங்களும் இந்த நடைமுறையை பின்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்திய பிரதேசத்தில், தாலுகா கோர்ட், மாவட்ட நீதிமன்றம், மாநில உயர் நீதிமன்றங்கள் என, அனைத்து கோர்ட்டுகளிலும், லட்சக்கணக்கான வழக்குகள் முடங்கிக் கிடக்கின்றன.

மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள் பற்றாக்குறை போன்ற பல காரணங்களால், நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகளவில் தேங்கியுள்ளன. இதை குறைக்க, அவ்வப்போது சிறப்பு வழக்கு தீர்வு முகாம்கள் நடத்தியும் பலனின்றி போனதால், தேவையற்ற வழக்குகளை வாபஸ் பெறுவது தான், சரியான வழியாக இருக்கும் என, மாநில அரசு கருதியது.

அதையடுத்து, இந்திய தண்டனை சட்டப்படி, சாதாரண குற்றங்களுக்காக தொடரப்பட்டிருந்த, 10 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்குகள், பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாத வழக்குகளை பட்டிய லிடுமாறு, நீதித் துறைக்கு உத்தரவிட்டது.

அதன்படி, அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களில், முடங்கிக் கிடந்த வழக்குகள் பட்டியலிடப்பட்டன; அந்த பட்டியல், மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மாநில உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர், 1.84 லட்சம் வழக்குகளை வாபஸ் பெறும் அறிவிப்பை, நேற்று வெளியிட்டார்.

பிறர் மீது, மாநில அரசு தொடர்ந்திருந்த அந்த வழக்குகளை வாபஸ் பெறுவதால், அரசுக்கு பெரியளவில் பாதிப்பு எதுவுமில்லை என, தெரிவித்த அமைச்சர் பாபுலால் கவுர்,, பிற முக்கிய வழக்குகளில், இதுபோல நடந்து கொள்ள மாட்டோம் என உறுதியளித்தார். மேலும் அவர் கூறியதாவது:கோர்ட்டுகளில், மலை போல தேங்கியுள்ள வழக்குகளை குறைப்பதற்கு இதுவும் ஒருவழி. ‘பெட்டி கேஸ்’ எனப்படும், சிறிய குற்றங்களுக்கான வழக்குகள் மட்டுமே, வாபஸ் பெறப்பட்டு உள்ளன. இதனால் கிடைக்கும் நேரத்தை, கோர்ட்டுகள், பிற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளுக்கு செலவிடலாம். என அமைச்சர் கூறினார்.

மூன்று கோடிவழக்குகள் முடக்கம்

நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில், மூன்று கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது; அதில், 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட வழக்குகள், 20 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட வழக்குகளாக உள்ளன. மாநிலங்களின், 10 உயர் நீதிமன்றங்களில், 50 லட்சம் வழக்குகள் நிலுவை யில் உள்ளன.கீழ் கோர்ட்டுகளில், ஒரு கோடி வழக்குகளும்; அதற்கு மேலான கோர்ட்டுகளில், 20 லட்சம் வழக்குகளும் முடங்கியுள்ளன.

எந்தெந்த வழக்குகள் வாபஸ்?

இந்திய தண்டனை சட்டப்படி, சாதாரண குற்றங்களுக்காக தொடரப்பட்டிருந்த வழக்குகள், வாபஸ் பெறப்பட்டு உள்ளன. அவை:
* சாதாரண திருட்டு
* வேகமாக கார் ஓட்டி விபத்து
* அடிபிடி சண்டை
* பொதுச் சொத்துக்கு சேதம்
* அரசு ஊழியரை தடுத்தல்
* சத்தமாக பாட்டு கேட்டது
* ஆபாசமாக நடந்து கொண்டது
* தடை செய்யப்பட்ட பகுதியில் நடமாட்டம்
* அத்துமீறி நுழைதல்
* மோசடியாக கையெழுத்திட்டு முறைகேடு
* பிறரின் புகழுக்கு களங்கம் உச்ச நீதிமன்ற நீதிபதிஎச்.எல்.தத்து கவலைசில நாட்களுக்கு முன், செய்தியாளர்களிடம் பேசிய, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து கூறியதாவது:
நீதிபதிகள், ஓராண்டில், 190 நாட்கள் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குகின்றனர். இந்த நாட்களில், காலை முதல் இரவு வரை உழைக்கின்றனர். பணி நாட்களில் மனைவி, குழந்தை, குடும்பத்துடன் செலவழிக்க முடியவில்லை.
இப்போதுள்ள வேகத்தில், முடங்கிய வழக்குகளை விசாரிக்க துவங்கினால், அவற்றை தீர்க்க,20 ஆண்டுகள் ஆகும். என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியது குறிப்பிடதக்கது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img