ஐக்கிய நாடுகள் சபை பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நியூயார்க் நகரில் உள்ள வால்ட்ரோப் அஸ்டோரியா ஓட்டலில் தங்கியுள்ள பிரதமர் மோடி அமெரிக்காவின் தலைசிறந்த நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார், அவர்களுக்கு அந்த ஓட்டலில் விருந்தும் அளித்தார்.
இந்த விருந்தை அமெரிக்காவில் பிரபல இந்திய உணவு வகைகளை சமைப்பதில் கைதேர்ந்த கலைஞரான விகாஸ் கண்ணா என்ற இந்தியர் தயாரித்திருந்தார். விருந்தின்போது, விகாஸ் கண்ணாவை சந்தித்த பிரதமர் மோடி, அவரது சமையலின் ருசியை பாராட்டினார்.
மேலும், அமெரிக்க அதிபருக்கு பரிசளிக்கும் நோக்கத்தில் இந்திய தேசிய கொடியில் கையொப்பமிட்ட மோடி, அதனை ஒபாமாவிடம் சேர்ப்பிக்கும்படி விகாஸ் கண்ணா மூலமாக தந்தனுப்பியுள்ளதாக புகைப்படத்துடன் கூடிய அதிகாரபூர்வமற்ற செய்தியை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படாத தகவலாக இருந்தபோதும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு பரிசளிப்பதற்காக இந்திய நாட்டின் தேசிய கொடியில் பிரதமர் நரேந்திர மோடி கையொப்பமிட்டு, அதனை ஒபாமாவின் மனைவியின் நன்மதிப்பை பெற்ற சமையற்கலைஞரிடம் ஒப்படைத்துள்ள செய்தி, சில ஊடகங்கள் வழியாக கசியத் தொடங்கியுள்ளன.
இந்த புகைப்படத்தை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு செய்துள்ள மும்பையை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆஷிஷ் மேத்தா என்பவர், தேசிய கொடியை அவமதித்த குற்றத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.டுவிட்டர் மூலம் பரவிய செய்தி தற்போது சமூக ஊடகங்களில்
படுவேகமாக பரவி வருகிறது.


