தேர்தல் நேரம் என்றால், சிறு சிறு புத்தகங்கள் கையேடுகளை வெளியிடுவது, கம்யூனிஸ்ட்களால் இயக்கப் படும் நியூ செஞ்சுரி புத்தக நிலையம், பாரதி புத்தகாலயம் உள்ளிட்ட பதிப்பகங்களின் தலையாய கடன்! இந்தக் கடனை வலுக்கட்டாயமாகவாவது அவை நிறைவேற்றி விடும்.
32 பக்கம், 48 பக்கம் என்ற அளவில் ரூ.10 ரூ.15 அல்லது ரூ.20 என குறைந்த விலையில், படங்கள் எதுவுமில்லாமல் வெறும் எழுத்துக்கள் மட்டும் கொண்ட மலிவு விலைப் பதிப்பாக கொண்டு வரப் படும். நாளிதழ்களில், மாத இதழ்களில் கட்டுரைகளாக வெளியிடுபவற்றை தொகுத்தும் கூட இவ்வாறு தேர்தல் கால வெளியீட்டு விளம்பரத்தை அவை மேற்கொண்டே தீரும்.
அந்த வகையில், ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் குறித்து எஸ்.விஜயன் என்பவர் எழுதிய ”நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” என்ற புத்தகம் செவ்வாய்க்கிழமை இன்று மாலை வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் இது விதிமீறல் எனக்கூறி, புத்தகத்தை வெளியிட தேர்தல் அதிகாரி தடை விதித்துள்ளார். மேலும், புத்தகங்ளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில், புத்தகத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்கவில்லை. பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை. இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளேன் என்று கூறினார்.
இதை அடுத்து, இன்று மாலை திட்டமிட்ட படி புத்தக வெளியீடு நடைபெறும் என்று கூறப் பட்டது.
இந்நிலையில், “நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” புத்தக வெளியிட்டு விழாவிற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது என்றும், திட்டமிட்டபடி மாலை 6.30 மணிக்கு தேனாம்பேட்டை பாரதி புத்தகாலயத்தில் வெளியீட்டு விழா நடைபெறுகிறது என்றும் தகவல் பகிரப் பட்டன.
முன்னதாக, இந்தப் புத்தகங்கள் பாரதி புத்தகாலயத்தின் விற்பனை நிலையத்தில் இருந்து பறிமுதல் செய்யப் பட்டதாக தகவல் வெளியானதும், அந்நிறுவனத்தின் சார்பிலேயே, அப்புத்தகத்தின் பிடிஎஃப் வடிவம், தடையை மீறி புத்தகம் வெளியாகும், இதனை தடை செய்து, மேலும் பாப்புலர் ஆக்கிவிட்டனர் என்ற குறிப்புடன், பொதுவெளியில் பகிரப் பட்டுள்ளது.
அதாவது அரசின் தடை விதிக்கப்பட்டால், அதை மீறி, புத்தகத்தைப் பரப்புவோம் என்ற கொள்கை முழக்கத்துடன், அந்தப் புத்தகத்தின், கறுப்பு வெள்ளை வடிவம், கலர் வடிவம் என்ற மேற்கோளுடன் இரு விதமான பிடிஎஃப் ஃபைல்கள், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்கள் மூலம் பலருக்கும் பகிரப் பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் புத்தகம் வெளியிடத் தடை யில்லை என்று தேர்தல் ஆணையர் கூறியிருப்பதால், பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது பாரதி புத்தகாலயம்!