Home Blog Page 6099

ராகுல் வேண்டாம்… சோனியாவே தொடரட்டும்: ஷீலா தீட்சித்

rahul-gandhi-soniaகாங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தொடரவேண்டும், ராகுல் காந்தி எல்லாம் வேண்டாம்; அவரது தலைமை கேள்விக்குரியது என்று கூறியிருக்கிறார் தில்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஷீலா தீட்சித். நாளை ராகுல் தில்லிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ராகுல், காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என்று செய்திகள் வெளியான நிலையில், ஷீலா தீட்சித் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், இந்தச் செய்தி வெளியான சில நிமிடங்களில், தாம் சோனியா காந்தியை புகந்து பேசியதாகவும், ராகுல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கான நல்ல தேர்வாக இருப்பார் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கருத்துரிமை காக்க இணைய சமவாய்ப்புச் சட்டம் தேவை : அன்புமணி

கருத்துரிமை பறிக்கப்படுவதை தடுக்க இணைய சமவாய்ப்பு சட்டம் தேவை என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

இணையத்தில் சமவாய்ப்பு என்கிற தற்போதைய நிலையை மாற்ற தனியார் செல்பேசி நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான இந்த சதித் திட்டத்திற்கு இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒருபோதும் துணை போகக் கூடாது.Anbumani-Ramadoss
இப்போது இணையத்தில் விரும்பும் தகவலைப் பெறுவதற்கும், விரும்பும் இணையப் பக்கத்தை பார்ப்பதற்கும் வாடிக்கையாளர்களுக்கு சமவாய்ப்பு இருக்கிறது. இதனை மாற்றி பணம் படைத்த நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தொலைதொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் மக்கள் கருத்துக் கேட்புக்கான  வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் சில இணையப் பக்கங்களை மட்டுமே பார்க்கச் செய்தல், சில இணையப் பக்கங்களை மட்டுமே வேகமாக அளித்தல், சில இணையப் பக்கங்களுக்கு கட்டணம் விதித்தல் – என்கிற புதிய நடைமுறையைத் திணிக்க டிராய் அமைப்பு முயற்சிக்கிறது. செல்பேசிகளில் இயங்கும் செயலிகளில் (App) சிலவற்றுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க முயற்சிக்கிறது.
எதிர்காலத்தில் செல்பேசிகள் வழியாகவே மிக அதிக அளவில் இணையம் பயன்படுத்தப்படும் என்பதால், செல்பேசி வழியாக வழங்கப்படும் சேவைகளில் இந்த விதிமுறைகளைத் திணிக்க டிராய் முயற்சிக்கிறது.
செல்பேசிகள் மூலம் இணையத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதற்கு கட்டணம் செலுத்துகின்றனர். இந்நிலையில், இணையத்தை அளிக்கும் நிறுவனங்களிடமும் கட்டணம் பெற்றுக்கொண்டு – பணம் கொடுக்கும் இணைய நிறுவனங்களின் தகவலை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் செயல் ஏற்கக் கூடியது இல்லை.
டிராய் அமைப்பின் இந்த நடைமுறை செயலுக்கு வந்தால் – இணையத்தில் எல்லா தகவலும் சமமாக கிடைக்காது. பணம் கொடுக்கும் பத்திரிகைகள், நிறுவனங்கள், அரசியல் அமைப்புகளின் தகவல் மட்டுமே மக்களுக்கு வழங்கப்படும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான கருத்துரிமை, பேச்சுரிமை என்பது தகவல்களை தடையின்றி பெரும் மக்களின் அடிப்படை உரிமையையும் உள்ளடக்கியிருக்கிறது. டிராயின் புதிய முயற்சி இந்த அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானதும் ஆகும்.
பணம் படைத்த பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் இணையத்தில் மேலோங்கச் செய்யும் ‘டிராய்’ அமைப்பின் முயற்சி கைவிடப்பட வேண்டும். இதற்கு மாறாக, இணையத்தில் எந்த ஒரு நிறுவனத்தின் இணையதளத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் கட்டணம் என்பது ஒட்டுமொத்த இணையதள சேவைக்குமானதாக இருக்க வேண்டுமே தவிர, ஒவ்வொரு இணையதளத்துக்கும் தனிக்கட்டணம் என்கிற முறையை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.
இணையத்தில் சமவாய்ப்பைக் காப்பாற்ற பிரேசில், சிலி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் சட்டம் கொண்டுவந்துள்ளன. அதே போன்று மக்களின் தகவலுக்கான உரிமையைக் காக்கும் வகையில் இந்திய அரசும் இணையத்தில் சமவாய்ப்பு சட்டம் (Net Neutrality law) நிறைவேற்ற வேண்டும்.

புத்தாண்டில் ஒன்றிணைய இலங்கை அதிபர் அழைப்பு

செவ்வாய்க்கிழமை இன்று தேசிய புத்தாண்டு இலங்கையில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அதிபர் மைத்ரீபால சிறீசேன, மக்களிடையே ஒற்றுமையும் இணக்கமும் ஏற்படுவதற்கான முக்கியத்துவத்தை உணர்த்திப் பேசினார். பாரம்பரிய சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, அதிபர் சிறீசேன அளித்த வாழ்த்துச் செய்தியில், நமது கலாசார, மத பாரம்பரியத்துக்கு நாம் முக்கிய இடத்தைக் கொடுத்து, புத்தாண்டில் அதற்கான சமூக மதிப்புகளைக் காட்டி, இலங்கையர்கள், தங்கள் பழைமையான மனிதப் பண்புகள், வாழ்வியல் மரபுகளை இன்றைய நாளில் உரு ஏற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். ஒற்றுமையை எதிர்நோக்கி அவர் வெளியிட்ட புத்தாண்டுச் செய்தியை ஜிங்குவா செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டி வெளியிட்டிருந்தது.

நாளை தில்லி திரும்புகிறார் ராகுல்: தடபுடலாக வரவேற்க இளைஞர் காங்கிரஸார் திட்டம்

புதுதில்லி: சுமார் 2 மாத கால மிக நீண்ட ஓய்வுக்குப் பின்னர் அகில இந்திய காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாளை தில்லிக்குத் திரும்புகிறார். அவருக்கு தடபுடலாக வரவேற்பு கொடுக்க இளைஞர் காங்கிரஸார் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ராகுல் விடுப்பு எடுத்துச் சென்றது கட்சியினர் மட்டுமல்லாது, பொது மக்கள் மத்தியிலும் பல்வேறு ஊகங்களைக் கிளப்பின. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வியால் ராகுல் மிகவும் அதிருப்தியும் விரக்தியும் அடைந்தார் என்றும், காங்கிரசுக்கு மீண்டும் புத்துணர்ச்சி கொடுக்கவும், அதை செயல்படுத்தவும் ராகுல் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யப்போகிறார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன்னர் கட்சியில் விடுப்பு எடுத்துக் கொண்டு ராகுல் திடீரென காணாமல் போனார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் கலந்து கொள்ளாமல் சென்றதால், அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார்… என்பது பற்றியெல்லாம் பல்வேறு ஊகங்கள் உலவின. இடையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாற்றப்பட்டதில், சோனியாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வெளிநாடு சென்றதாகவும் கூறப்பட்டது. மேலும், அவர் ஒரு பெண்ணை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும், குளியல் அறையில் வழுக்கி விழுந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூட செய்திகள் உலவின. ஒவ்வொரு முறையும் அவர் இன்று திரும்புவார், நாளை திரும்புவார் என்று கூறப்பட்டு, அது பொய்யாகி, இதனால் ராகுலை யாரும் கண்டு கொள்ளாத நிலை உருவானது. இந்நிலையில், தில்லியில் வரும் 19 ஆம் தேதி நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நடத்தும் விவசாயிகள் பேரணியில் ராகுல் கலந்து கொள்வார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அறிவித்தனர். இதனை காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணி உறுதி செய்தார். இதன் மூலம் ராகுல்காந்தி இந்த வாரம் தில்லிக்குத் திரும்புவது உறுதியானது. இதனால், அவர் புதன்கிழமை நாளை தில்லி திரும்புவார் என்று கூறப்படுகிறது. நாளை தில்லி திரும்பும் ராகுலுக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்க தயாராகி வருகிறார்கள்.

தாலியறுப்புக்கு எதிராக கருப்புச் சட்டை கிழிக்கும் போராட்டம்

tamilarmunnetrakazakam சென்னை: திராவிடர் கழகம் நடத்தும் தாலி அகற்றும் போராட்டத்தை கண்டித்து செவ்வாய்க் கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும் தமிழர்களின் அடிமைச் சின்னமான கருப்பு சட்டை கிழிக்கும் போராட்டமும் நடைபெறும் என்று தமிழர் முன்னேற்றக் கழகம் தெரிவித்தது. இந்த நிகழ்வில், வழக்கறிஞர் அய்யா பா. குப்பன்( 35 ஆண்டுகள் திராவிடர் கழகத்தில் உழைத்து பின் வெளியேறி, 2009 திலிருந்து திராவிட இயக்கத்தின் தமிழ் இன விரோத போக்கை வெளிச்சம் போட்டு காட்டி வருபவர் ) , சேகர், மாவட்ட பொறுப்பாளர் தமிழர் முன்னேற்றக் கழகம், செல்வா பாண்டியர், தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம். புதுமலர் பிரபாகரன் மறத்தமிழர் சேனை , அய்யா அருகோ ஆசிரியர் எழுகதிர், கணேசன் நிறுவனர் தலைவர் தமிழர் பேரரசுகட்சி, (முன்னாள் திராவிடர் கழகம் ) சி. பா. அருட்கண்ணனார் தமிழர் சமூகம் , இராஜ்குமார் பழனிச்சாமி தமிழர் பண்பாட்டு நடுவம், புதுவை அழகர் தமிழர் களம் ,சூரிய பிரகாஷ் தலைவர் உலக தமிழர் பாதுகாப்பு இயக்கம், வழக்கறிஞர் ச.செந்தில்குமார். செயலாளர் மக்கள் மாநாட்டுக் கட்சி, திருமாறன். மரபு வழி தமிழ் தேசிய தக்கார் அவையம், பெருமாள் தேவன், வழக்கறிஞ்சர் பா. வேணுகோபால் தலைவர் தமிழ் தேசிய வழக்கறிஞர் மையம் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் என்றும் அது தெரிவித்தது.

நீதிபதி வகேலா மாற்றம்: சொத்துக் குவிப்பு வழக்கோடு முடிச்சு போடுகிறார் கருணாநிதி

04-04-15 Dmk Karunathi Leter photo 01சென்னை: “நீதியே, நீ இன்னும் இருக்கின்றாயா?” என்ற தலைப்பில் இன்று கருணா நிதி வெளியிட்ட உடன்பிறப்புக் கடித அறிக்கையில், 13-4-2015 தேதிய ஆங்கில நாளிதழ் செய்தியை பின்னணியாகக் கொண்டு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், கர்நாடக நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கோடு, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா மாற்றத்தை முடிச்சு போட்டு, கேள்வி எழுப்பியுள்ளார். அந்தக் கடித அறிக்கையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்துவின் தலைமையிலான நீதிபதிகள் குழு, நீதிபதி வகேலாவின் மாறுதலுக்கு பரிந்துரை செய்தபோது, நீதிபதி வகேலா ஒரிசா உயர் நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தை விட சிறிய நீதிமன்றம் என்பதால், அதனை ஏற்றுக்கொள்வதில் தனக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு விசாரணை தொடர்பாக, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நேர்மையோடு நடந்து கொள்வதால், அவரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விரைவில் மாற்றப்படவிருப்பது உண்மையா? கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவை மாற்றி விட்டு, அவருக்கு அடுத்த இடத்திலே உள்ள நீதிபதி மஞ்சுநாத் அவர்களை கூடுதல் பொறுப்பில் நியமிக்க விருப்பது உண்மையா? மத்திய அரசின் சார்பாக ஒருவர் இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறதே, அது உண்மையா? நீதிமன்ற வட்டாரங்களில் பேசப்படுவதாக வந்த அந்த செய்தியை மெய்ப்பிக்கும் வகையில் அல்லவா தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மாற்றப்பட்டிருக்கிறார். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி வகேலா திடீரென்று, வேறொரு சிறிய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு, வகேலா பற்றிய சில விவரங்களை உனக்கு நான் தெரிவிக்கிறேன். 2–2–2015 அன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில், பவானிசிங் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நீடிக்கலாமா என்ற விசாரணை வந்த போது, தலைமை நீதிபதி வகேலா அவர்களே, “சி.ஆர்.பி.சி. 24(1)ன்படி, கிரிமினல் வழக்கு ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு மாற்றம் செய்யும்போது எந்த மாநிலத்துக்கு மாற்றப்படுகிறதோ, அந்த மாநில அரசு தான் அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார். மேலும் தலைமை நீதிபதி வகேலா அவர்கள், “இந்த மேல்முறையீட்டு மனுவில் நீங்கள் (பவானி சிங்) ஆஜராகியிருப்பது சட்டத்துக்குப் புறம்பானது, 24 (1)ஐப் படித்து பாருங்கள். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை; கர்நாடக அரசு இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்காத போது, பவானி சிங் ஆஜராகியிருப்பது சட்டத்துக்குப் புறம்பானது” என்றெல்லாம் வகேலா உறுதிபடக் கருத்து தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு முன்பே சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, பாலி நாரிமனின் மகன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பதால், பாலி நாரிமன் ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவது பார் கவுன்சில் விதித்துள்ள நெறிகளுக்கு எதிரானது என்று புகார் அளித்துள்ளார். “இந்த வழக்கு தொடர்பாக உங்கள் மீது ஊழல் புகார் இருப்பதால், விசாரிப்பதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ள வேண்டும்” என்று டிராபிக் ராமசாமி தலைமை நீதிபதி தத்துவுக்கே மனு அளித்துள்ளார் என்பதும் நினைவிலே கொள்ளத்தக்கது. கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வகேலா ஒரிசா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய காலேஜியம் இந்த உத்தரவை 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு பிறப்பித்துள்ளது. நமது மதிப்பு மிக்க நீதித்துறை நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பதில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்பது அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று. ஆனால் “மாறுதல்கள்” போடுவதில் இவ்வளவு விரைந்து செயல்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாட்டின் மீது அக்கறை கொண்ட குடிமகன் என்ற முறையில் சட்டம் மற்றும் நீதியின் பாதுகாவலர்களிடமிருந்து சில நியாயமான கேள்விகளுக்கு பதில் கோர விரும்புகிறேன். ஒரிசா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி கடந்த பிப்ரவரி மாதம் 2015லிருந்து காலியாக இருக்கும்போது, திடீரென்று ஏன் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த “டிரான்ஸ்பர்” போடப்பட்டது? தேசிய நீதித்துறை நியமனக் கமிஷனுக்கான அறிவிக்கை திங்கள்கிழமை அன்று வெளியிடப்படவுள்ள நிலையில், அதற்கு முதல் நாள் இந்த மாறுதலைச் செய்ய வேண்டிய காரணம் என்ன? நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர உருவாக்கப்பட்ட “தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை” எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு முன்பு 15–4–2015 அன்று விசாரணைக்கு வருவதற்குள் ஏன் இந்த மாற்றல் உத்தரவு போடப்பட்டது? கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் வாதாடிய அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமனம் செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பும், அதே சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளி வருவதற்கு முன்பும் இப்படியொரு மாறுதல் செய்யப்பட்டுள்ளதை நாம் இந்த நேரத்தில் மறந்து விட முடியாது. எனவே இந்த மாறுதல் பற்றி யாருக்காவது சந்தேகம் எழுந்தால் அதிலே தவறு இருக்க முடியுமா? உச்ச நீதிமன்றத்தில் 15ஆம் தேதியன்று அளிக்கப்படும் தீர்ப்பில் பவானி சிங் நியமனம் தவறானது தான் என்று ஒருவேளை சொல்லப்படுமேயானால், சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டினை விசாரிப்பதற்கு புதிய நீதிபதி ஒருவரை கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தான் நியமிக்க வேண்டும். மேலும் அரசு புதிய வழக்கறிஞராக பவானி சிங் அவர்களுக்கு பதிலாக வேறு ஒருவரை நியமனம் செய்ய வேண்டிய பொறுப்பும், கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குத் தான் உண்டு. மேலும் தற்போது ஜெயலலிதாவின் மேல் முறையீட்டினை விசாரித்து வரும் நீதிபதி குமாரசாமி அவர்கள் வரும் ஆகஸ்ட் திங்களில் ஓய்வு பெறவிருப்பதால், அவருக்கு பதிலாக இந்த முக்கியமான வழக்கினை விசாரிக்க வேண்டிய நீதிபதியையும் நியமிக்க வேண்டிய பொறுப்பும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கே உண்டு. இந்தநிலையில் தான் அவர் மாற்றப்பட்டுள்ளார். இந்த உச்சக்கட்ட ஊழலுக்கெல்லாம் முழு முதற்காரணம் யார்? எதற்காக இந்த மாறுதல்? இதையெல்லாம் உன்னுடைய யூகத்திற்கே விட்டு விடுகிறேன். நீதித் துறையின் சுதந்திரம், நேர்மை, நடுநிலை – ஆகியவற்றின் மீது மிக உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறோம். நாடு முழுவதும் ஒளிவு மறைவில்லாத வெளிப்படையான நிர்வாகத்திற்கான கோரிக்கை வலுப்பெற்று வரும் இந்தக் காலகட்டத்தில், அரசின் முடிவுகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் வேளையில், நீதித் துறையின் நிர்வாக முடிவுகள் மட்டும் வேறு ஒரு தளத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் ஏன் இருக்க வேண்டும் என்று சில மூத்த வழக்கறிஞர்களும், நடுநிலையாளர்களும், பத்திரிகையாளர்களும் நம்மிடம் கேட்கும் போது நாம் என்ன பதில் கூறுவது? நமது ஜனநாயக நாட்டில் அனைத்துக்கும் மேலானது நீதித் துறை தான்; ஜனநாயகத்தின் அனைத்து அங்கங்களையும் கண்காணிப்பதே நீதித் துறைதான். அப்படிப்பட்ட உயிர்நாடியான அந்தத் துறையின் மீதே, இதுவரையில் இல்லாத அளவுக்கு, இப்படியெல்லாம் விமர்சனங்கள் வருவது நம் நாட்டுக்கும், நாம் போற்றிப் பாதுகாத்து வரும் ஜனநாயகத்திற்கும், வாய்மையே வெல்லும் – (சத்தியமேவ ஜயதே) என்று நாம் கொண்டாடி வரும் கோட்பாட்டுக்கும் உகந்தது தானா? – என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கிளப்பும் சந்தேகம்

சென்னை:
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி  இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவுனர்  ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரேந்திர ஹீராலால் வகேலா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஒடிஷா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். குறிப்பாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளுக்குரிய அதிகாரம் நீக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன்பாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது தவறாகும்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வகேலா அப்பழுக்கற்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் வரலாற்று சிறப்பு மிக்க பல தீர்ப்புகளை அளித்திருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா, அதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நாளிலிருந்தே வகேலாவை இடமாற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அவரைக் கர்நாடகத்திலிருந்து சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி முயன்றபோது அதை வகேலா கடுமையாக எதிர்த்ததால் அம்முடிவு கைவிடப்பட்டது. இந்த நிலையில், நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவின் அதிகாரம் முடிவுக்கு வரும் நிலையில் அவசர அவரசமாக வகேலா மாற்றப்பட்டிருக்கிறார்.
இந்தியாவின் மூத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் ஒருவரான வகேலா அடுத்த சில மாதங்களில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறவுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் ஒரு சில மாதங்கள் மட்டும் பணியாற்றுவதற்காக இன்னொரு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவது முறையல்ல. வகேலா இப்போது 62 நீதிபதிகளைக் கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். இவரை இடமாற்றம் செய்ய வேண்டுமானால் இதைவிட பெரிய உயர்நீதிமன்றங்களில் ஒன்றுக்குத் தான் மாற்ற வேண்டும். அதுதான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு ஆகும்.
ஆனால், 27 நீதிபதிகள் மட்டுமே உள்ள ஒதிஷா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வகேலா இட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த இடமாற்றத்திற்கும் நீதிபதி வகேலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதையும் மீறி அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது நியாயமான நடவடிக்கையாக தோன்றவில்லை.
தலைமை நீதிபதி வகேலா இடமாற்றம் செய்யப்பட்ட நேரமும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் உச்சநீதிமன்றம்  நாளை தீர்ப்பளிக்கவுள்ளது.
பவானிசிங் நியமிக்கப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால்  ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது புதிதாக விசாரணை நடத்த வேண்டியிருக்கும். இவ்வழக்கை இப்போது விசாரித்து வரும் நீதிபதி குமாரசாமி வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், இதற்காக புதிய நீதிபதியை நியமிக்க வேண்டியிருக்கும். அந்த புதிய நீதிபதி யார்? என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்குத் தான் உள்ளது.
யாருக்கும் வளைந்து கொடுக்காத தன்மை கொண்ட நீதிபதி வகேலா, ஏற்கனவே இந்த விஷயத்தில் மேலிடத்திலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்களை நிராகரித்தவர். இத்தகைய சூழலில் நீதியரசர்   வகேலா இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு ஐயங்களையும், யூகங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கியது, அவரது மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை யாரும் கேட்காமலேயே 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று ஆணையிட்டது போன்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்துவின் நடவடிக்கைகள் நீதித்துறை வட்டாரங்களில் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகிருக்கின்றன. இந்த நிலையில் வகேலா மாற்றப்பட்டிருப்பது இந்த ஐயங்களை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. நீதிபதி வகேலா இன்னும் இரு மாதங்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீடிக்கலாம் என்ற போதிலும், அவை விடுமுறை காலம் என்பதால் அதனால் எந்த தாக்கமும் ஏற்படாது.
நீதிபதி வகேலாவின் இடமாற்றம் தொடர்பான சர்ச்சைகளையும், ஐயங்களையும் போக்க வேண்டியது உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் கடமை ஆகும். எனவே, வகேலாவின் இடமாற்றத்தை ரத்து செய்து அவருக்கு பதவி உயர்வு வரும் வரை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடரச் செய்ய  வேண்டும். – என்று கோரியுள்ளார்.

கார் திருட்டு வழக்கில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.,கைது

கௌஹாத்தி: அஸ்ஸாமில் கார் திருட்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ. ரூமி நாத் கைது செய்யப்பட்டார். அவருக்கு கொள்ளை கும்பலுடன் தொடர்பிருப்பதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. சர்ச்சைக்குரிய ரூமி நாத், தனது முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் இஸ்லாமிய மதத்துக்கு மாறி இரண்டாவதாக கடந்த 2012ல் ஜாகீர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ரூமி நாத்துக்கு அந்த மாநிலத்தில் உள்ள கார் கொள்ளை கும்பலுடன் தொடர்பிருப்பதாக பரவலாக புகார் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ரூமி நாத் கைது செய்யப்பட்டார். ரூமிநாத் கைது தொடர்பாக போலீஸ் அதிகாரி லால் பரூவா செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, ரூமி நாத் கைது செய்யப்பட்டு திஸ்பூர் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, காவலில் எடுத்து தீவிரமாக விசாரிப்போம்.” என்றார். ரூமிநாத்துக்கு எதிராக கிரிமினல் சதித் திட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தைலாபுரம் தோட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு ராமதாஸ் மரியாதை

ramados-thailapuram-ambedkar திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவுனர் ராமதாஸ், அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கேபினட் அந்தஸ்துடன் ஹரியாணா மாநில யோகா விளம்பரத் தூதராக ராம்தேவ்

யோகா, ஆயுர்வேதம் ஆகியவற்றுக்கான ஹரியாணா மாநில விளம்பரத் தூதராக யோகா குரு பாபா ராம்தேவ் நியமிக்கப்பட்டு அவருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து அளிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவலை ஹரியாணா மாநில சுகாதார, விளையாட்டுத் துறை அமைச்சர் அனில் விஜ் டுவிட்டரில் தகவலாகத் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து முன்னர் கூறியபோது, ராம்தேவின் மேற்பார்வையில், ஹரியாணாவில் மூலிகைக் காடு உருவாக்கப்படும். பள்ளிக் கல்வியில் யோகா சேர்க்கப்படுவதால், இந்திய மரபுகள், பாரம்பரியங்கள் அடிப்படையிலான முன்மாதிரி மாநிலமாக ஹரியாணா திகழும் என்றார். மேலும், ஹரியாணா மாநிலப் பள்ளிகளில் யோகா கட்டாயப் பாடமாக்கப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும், 6,500 கிராமங்களிலும் யோகா கூடங்கள்அமைக்கப்படும் என்று கூறியிருந்தார்.