கிரிமினல் குத்தமாய்யா பண்ணிட்டாரு? ஏன் இப்டி கைது செய்யணும்னு அலையுறீங்க?
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்த நிலையில், மாலை அவரது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்று சம்மன் வழங்கினர்.
முன்னதாக, இன்று நடந்த விசாரணையில் உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றமும், அவரது வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க மறுத்துவிட்டது. நாளை புதன்கிழமை விசாரிக்கப் படும் என்று கூறியது.
இந்நிலையில் சிதம்பரத்தின் தில்லி வீட்டுக்குச் சென்று அவர் உடனடியாக ஆஜராகுமாறு சம்மன் கொடுத்துள்ளனர் சிபிஐ அதிகாரிகள். ஆனால் சிதம்பரம் வீட்டில் இல்லை என்று கூறப் பட்டது. இதை அடுத்து, அவர் காணாமல் போனதாகக் கூறப் படுகிறது.
ப.சிதம்பரம் விவகாரத்தில் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா.
ப.சிதம்பரம் மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், இது என்ன கிரிமினல் வழக்கா? இல்லையே! இன்று நடந்தது நமது நாட்டின் ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல என்று கூறினார் ஆனந்த் சர்மா. மேலும், இது தொடர்பில் ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறார். அது நாளை விசாரிக்கப் படும். அதற்குள் என்ன அவசரம்? சிபிஐ.,யும் அமலாக்கத்துறையும் இன்று இரவே வேட்டையாட வேண்டும் என்று அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா.
இதனிடையே, நடிகை குஷ்பு தெரிவித்துள்ள கருத்தில், ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ சென்றது பாஜகவின் பயத்தை காட்டுகிறது; இதனை அவர் சட்டரீதியாக சந்திப்பார் என்று கூறியுள்ளார்.



