
நகைச்சுவைக்காக சினிமாவில் சேர்க்கப்பட்ட ஒரு காட்சி, நிஜத்தில் நடந்திருக்கிறது என்பது போல் இந்தச் செய்தி வெளியாகி பலரது ஆச்சரியத்தை தூண்டிவிட்டுள்ளது.
தமிழில் வெளிவந்த ‘வெண்ணிலா கபடிக் குழு’ சினிமா சீனில் நடிகர் சூரி ஒரு கடையில் பரோட்டா சாப்பிடச் செல்வார். போட்டிக்காக ஐம்பது பரோட்டா சாப்பிட்டால்… என்று கடைக்காரர் சொல்ல… போட்டிக்கு சம்மதித்து பரோட்டா சாப்பிட அமருவார். சப்ளையர் பரோட்டாவை வைத்துவிட்டு சால்னா எடுத்து வருவதற்குள் மொத்த பரோட்டாவையும் காலி செய்திருப்பார்.
இது போன்ற காட்சியை நிஜத்தில் நடத்திக் காட்டியிருக்கிறார் ஒரு மூதாட்டி!கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா பண்டிகையை முன்னிட்டு உணவு திருவிழா நடைபெற்றது. அதில் பெண்களுக்கான போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் 6 இட்லிகள் வைப்பார்கள். யார் முதலில் அனைத்து இட்லிகளையும் தின்று முடிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள். அதற்கு பரிசும் உண்டு.
பெண்கள் பலர் முண்டியடித்துக் கொண்டு இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்டு, அமைதியாக ஓர் ஓரமாக அமர்ந்திருந்தார் ஹுலுவாலியைச் சேர்ந்த 60 வயது நிரம்பிய சரோஜாம்மாள். இட்லி சாப்பிடும் போட்டி தொடங்கியதுதான் தாமதம்… அடுத்த நொடி, மற்றவர்கள் ஓர் இட்லி மென்று முடிப்பதற்குள் மளமளவென 6 இட்லிகளையும் உள்ளே தள்ளி தின்றுவிட்டார் சரோஜம்மாள்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் திகைத்துப் போய் நின்றனர். 60 வயது. 60 நொடிகளில் 6 இட்லிகள்… ஒரு நிமிடத்திற்குள் ஆறு இட்லிகளை விழுங்கிய சரோஜம்மாவின் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



