திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு விரைவு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 250 ரூபாய் கட்டண தரிசனமும், 100 ரூபாய் கட்டண தரிசனமும் மகா மண்டபத்தில் நுழையும் போது ஒரே வரிசையில் தரிசனத்திற்கு அனுப்பப்படுகின்றன. இதனால் 250 ரூபாய் விரைவு தரிசன வரிசையில் செல்லும் பக்தர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
இதனைப் போக்கும் விதமாக, சிறப்பு விரைவு தரிசன பக்தர்களுக்கு ஒரு லட்டு, பிரசாத விபூதிகள் அடங்கிய பிரசாத பை வழங்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு அறநிலையத்துறை ஆணையரும் அனுமதி அளித்ததை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளில் கோயில் நிர்வாகம் இறங்கியுள்ளது.
முதலமைச்சர் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் மூலம் லட்டு வழங்கும் நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இது போல் லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டு கடந்த மாதம் தொடங்கப் பட்டது.
இந்நிலையில் டிக்கெட் கட்டண அதிருப்தியாளர்களுக்காக லட்டு வழங்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது, பக்தர்களுக்கு ‘அல்வா’ கொடுக்கும் செயலே என்று கருத்து கூறி வருகின்றனர் அன்பர்கள்.