முசுலிம்களுக்காக முதல் குரல் இல்ல… கடைசிக் குரல் கூட ரஜினி கொடுக்க வேண்டாம், அவர் நடிப்போடு நிறுத்திக் கொள்வது நல்லது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டேவிட் பாண்டியன் விமர்சனம் செய்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டேவிட் பாண்டியன், இந்தியாவில் எவ்வளவு மாநிலங்கள் உள்ளன, எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்ற எந்த விவரமும் தெரியாதவர் நடிகர் ரஜினிகாந்த்! சிஏஏவினால் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு வராது என்று கூற ரஜினி யார்? முதல் குரல் என்ன… கடைசி குரல் கூட கொடுக்க வேண்டாம் என்றார் டேவிட் பாண்டியன்!
‘இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு இல்லை என்று சொல்வதற்கு இவர் யார்? இவர் என்ன சட்டமன்ற உறுப்பினரா? கட்சியின் தலைவரா? அவர் ஒரு நடிகர்! நடிப்போடு அவர் நிறுத்திக் கொள்வது நல்லது என்றார் டேவிட் பாண்டியன்.
ரஜினிக்கு இந்தியாவில் எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றன? எத்தனை மாநிலங்கள் இருக்கின்றன, இந்தியாவின் முதல் பட்ஜெட்டிலே எவ்வளவு பணம்? அவரைப் பேசச் சொல்லுங்கள் பார்ப்போம்!
யார் யாரை ஏமாற்றுவது? ஏதோ இவர் திரையில் செய்கிற சேட்டைகளைப் பார்த்து அவர் திரையுலகில் முதலிடம் பெற்றிருக்கலாம். செய்யட்டும். பாலபிஷேகம் நடக்கட்டும், வாழைப்பழ அபிஷேகம் நடக்கட்டும் ஆனால்… அரசியல் பேசுவதற்கு அவருக்கு எந்த அருகதையும் இல்லை.
இப்போது சொல்கிறார் இஸ்லாமியர்களுக்கு என்றால் முதலில் குரல் கொடுப்பேன் என்று.. அவர் கடைசி குரல் கூட கொடுக்க வேண்டாம். எங்களைத் தற்காத்துக் கொள்ள எங்களுக்குத் தெரியும். எங்களுக்குப் பாடம் சொல்லித்தர அவர் அவராகவே தன்னை ஆசிரியராக நியமித்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்பது எங்களுக்குத் தெரியும் என்று பேசினார் டேவிட் பாண்டியன்.
சனநாயகம், உரிமை என்றெல்லாம் குரல் கொடுக்கும் சர்வாதிகாரிகளான கம்யூனிஸ்ட்களின் அடிப்படைக் கொள்கையே, ஜனநாயக நெறிமுறைகளை நசுக்குவதும், அடுத்தவர் குரல்வளையை நெரிப்பதும்தான் என்பது டேவிட் பாண்டியனின் பேச்சில் இருந்து தெரிகிறது.
கருத்து சொன்னால் ஏன் சொன்னார் என்றும், கருத்து சொல்லாமல் அமைதியாகப் போனால் ஏன் அவர் வாய் திறக்கவில்லை என்பதும் டேவிட் பாண்டியன் போன்ற கம்யுனிஸ்ட் அரசியல்வாதிகளுக்கு கைவந்த அரசியல். ஆனால் டேவிட் பாண்டியன் போன்ற சர்வாதிகார கம்யூனிஸ்ட் கூடாரத்தில் இருந்து வந்தவர்களை பேசவிட்டு வேடிக்கை பார்த்திருக்கும் நபர்களை இவர்கள் பாசிஸம் என்று விமர்சிப்பதுதான் உலகின் ஆகச்சிறந்த அரசியல் ஜோக்!