தேவையற்ற உயிர் பயத்தில் மக்கள்: நம்பினால் நம்புங்கள் மெடிக்கல் ஷாப்களில் Face Maskம் Hand Wash ம் பெரிய டிமாண்ட். மிக அதிக விலை and கிடைக்கவும் இல்லையாம். ஒரு 70+மூதாட்டி, சுயமாக பணம் எண்ணக்கூடத் தெரியவில்லை. சர்வசாதாரணமாக ரூ10,000க்கு 37 Face Mask மட்டும் (@ 270)வாங்கறார்.
- என்று டிவிட்டர் சமூகத் தளத்தில் பதிவு செய்து வருகின்றனர். இதற்குக் காரணம், இப்போது மாஸ்க், ஹாண்ட் க்ளௌ விலை எல்லாம் மெடிக்கல் ஷாப்களில் எகிறிவிட்டதுதான்!
ஒரு காலத்தில் பண்டில் பண்டிலாக வாங்கி வெச்சிருந்தாலும் மாஸ்ட்க் எல்லாம் அவ்வளவாக போகாது. இப்போது ஏக கிராக்கி, டிமாண்டுக்கு ஏத்த மாதிரி சப்ளை இல்லை என்பதால் விலையும் எகிறிவிட்டது என்கின்றனர் கடைக்காரர்கள். எல்லாவற்றுக்கும் காரணம் கொரோனா என்றால் நிச்சயமாக இல்லை! கொரொனா குறித்த மக்களின் அச்சம்தான் காரணம்!
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்கள் மாஸ்க் பயன்படுத்த வேண்டும் என்றும், கையுறைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை கூறப்பட்டு வருவதால், அதை எண்ணி, அதிக அளவில் மாஸ்க், கையுறைகளை வாங்கி வருகின்றனர் பலர். இதனால், மாஸ்க் விலை பன்மடங்கு அதிகரித்து விட்டது. சாதாரணமாக 2ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மூன்று அடுக்கு கொண்ட மாஸ்க் விலை ரூபாய் 22க்கு விற்கப்படுகிறதாம். வைரஸை கட்டுப்படுத்தக் கூடிய தன்மை கொண்ட N – 95 மாஸ்க் விலை 90 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக அதிகரித்து விட்டதாம்.
தில்லியில் கொரோனாவால் முப்பதுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பலரும் முகத்துக்கு மாஸ்க் அணியத் தொடங்கியுள்ளனர். இதை அடுத்து, மாஸ்க் விலை அதிகரித்து வருகிறது.
முன்னதாக, மத்திய அரசு இதனால்தான் முகமூடிகள், கையுறைகள் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. சீனாவில் பெருமளவில் வைரஸ் தொற்று பரவிய நிலையில், இந்தியாவிலும் வைரஸ் பரவக்கூடிய வாய்ப்புகள் இருந்த நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது.
தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் என்பதாலும், வெயில் அதிகம் இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு இல்லை என்ற நிலையிலும், சென்னையில் மக்கள் அச்சத்தின் காரணத்தால், அதிக அளவில் தாங்களும் மாஸ்க் அணிந்து செல்கின்றனர். இதனால் மருந்தகங்களில் மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனியார் நிறுவனங்களே தயாரித்து சப்ளை செய்து வந்த நிலையில் ஏகத்துக்கும் விலை உயர்வு ஏற்பட்டு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதால், முகமூடிகள், கையுறைகளை அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு அரசின் மருந்தகங்களில் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.