கரோனா குறித்த செல்போன் காலர் ட்யூன் வடிவிலான விழிப்பு உணர்வு செய்தியை அந்தந்த மாநில மொழிகளில் வழங்க வேண்டும் என பாமக நிறுவுனர் ராமதாஸ், திமுக., எம்பி., கனிமொழி, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவிலும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை அடுத்து, கரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியது. அதன்படி, ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ளும் போது, ரிங்டோன் வடிவில் கரோனா குறித்த விழிப்புணர்வு செய்தி கூறப்படுகிறது. அதிலும் லொக் லொக் எனும் இருமலுடன் செய்தி ஆங்கிலத்தில் உள்ளது.
இதனால், இந்த விழிப்புணர்வு செய்தியை மாநில மொழிகளில் வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கரோனா வைரஸ் தவிர்ப்பு குறித்த செல்போன் காலர் ட்யூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தி மிகவும் பயனுள்ளது. ஆனால், நாட்டின் கடைக்கோடி குடிமகன் கூட செல்பேசியை பயன்படுத்தும் நிலையில், ஆங்கிலத்தில் மட்டும் செய்தியை வழங்குவது முழுமையாக பயனளிக்காது. மாநில மொழிகளிலும் வழங்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தவிர்ப்பு குறித்த செல்பேசி காலர் ட்யூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தி மிகவும் பயனுள்ளது. ஆனால், நாட்டின் கடைக்கோடி குடிமகன் கூட செல்பேசியை பயன்படுத்தும் நிலையில், ஆங்கிலத்தில் மட்டும் செய்தியை வழங்குவது முழுமையாக பயனளிக்காது. மாநில மொழிகளிலும் வழங்க வேண்டும்!
அதேபோன்று, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தன் ட்விட்டர் பக்கத்தில், “கரோனா வைரஸ் தவிர்ப்பு குறித்த செல்போன் காலர் ட்யூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தி வரவேற்கத்தக்கது. அதேசமயத்தில், விழிப்புணர்வு செய்தியை அந்தந்த மாநில மொழிகளில் வழங்குவது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்” என பதிவிட்டுள்ளார்.
இது போல் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை பதிவிட்டு வருகின்றனர்.