பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட பிகாரைச் சேர்ந்த இந்தியர் 16 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்.
பிகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள பவானி பிகா கிராமத்தில் வசிப்பவர் ராம் சந்திர யாதவ் (வயது 58). இவருக்கு 42 வயது இருக்கும் போது திடீரென்று ஒரு நாள் வீட்டிலிருந்து காணாமல் போனார். தற்போது 16 ஆண்டுகள் கழித்து அவர் பிகாருக்கு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ராஜ் குமார் கூறுகையில்,
இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது ஊரில் இருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தேரா பாபா நானக் எல்லை வழியாக பாகிஸ்தான் பகுதிக்குள் சென்றுள்ளார்.
அங்கு பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இவரை சிறைப் பிடித்தனர். 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 19 அன்று பாகிஸ்தான் எல்லைப் படையினர் இந்திய எல்லைப் பாதுகாப்பு 89-வது படையிடம் ஒப்படைத்தனர்.
பாதுகாப்பு படையினர் இவரிடம் விசாரித்த போது பவானி பிகா என்ற கிரமத்தின் பெயரை மட்டுமே கூறினார். எல்லைப் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
பின், கிராம மக்களிடம் இவரின் புகைப்படத்தை காட்டியதில் இவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. சில நாள்களுக்குப் பிறகு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தவரிடம் இவரது புகைப்படத்தை காட்டியதில், அவர் எனது உறவினர் என்று கூறினார்.
யாதவின் மனைவி புகைப்படத்தைப் பார்த்து உறுதி செய்ததை அடுத்து எல்லைப் பாதுகாப்புப் படை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்த பின் அழைத்து வந்தோம் என கூறினார்.
இதுகுறித்து அவரது மனைவி சகுந்தி தேவி கூறுகையில், “அவர் இல்லை என்று எல்லோரும் நம்பினார்கள், ஆனால் நான் நம்பவில்லை. நான் தற்போது இழந்த என் உலகத்தை மீண்டும் பெற்றுள்ளேன்” என்று கூறினார்.
யாதவிற்கு 5 குழந்தைகள் இருந்த நிலையில் வீட்டைவிட்டு வெளியேறினார். தற்போது 4 குழந்தைகளுக்கு திருமணமானது குறிப்பிடத்தக்கது.