
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் அச்சம் காரணமாக நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி தெரிவித்துள்ளார்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாத இறுதியில் தொடங்கி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், குளிர்காலக் கூட்டத் தொடரை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்த மக்களவை தயாராக உள்ளது. எனினும் நாடாளுமன்ற விவகார மத்திய அமைச்சரவைதான் அதுபற்றி முடிவு செய்யும். எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை செய்து, கூட்டத்தொடருக்கான தேதியை அமைச்சரவை அறிவிக்கும் என்று கூறியிருந்தார். .
மேலும், மத்திய அரசும் கூட இதுவரை குளிர்காலக் கூட்டத் தொடரை நடத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காமலே இருந்தது. இதை அடுத்து வரும் ஜனவரியில் பட்ஜெட் தொடருடன் சேர்த்து குளிர்காலக் கூட்டத் தொடர் நடத்தப் படலாம் என்ற பேச்சு எழுந்தது.
இந்நிலையில், இந்த முறை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாகவும் நேரடியாக ஜனவரியில் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டலாம் என்றே அனைத்துக் கட்சிகளும் விரும்புவதாகவும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதிக்க கூட்டத் தொடரைக் கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கடிதம் எழுதியிருந்தார். அவரது கடிதத்துக்கு பதிலளித்துள்ள அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி, குளிர்காலக் கூட்டத் தொடர் ரத்து குறித்து உறுதி செய்துள்ளார்.