ஒருவழியாக நீண்ட இழுபறிக்கு பின் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக.,வுக்கு 20 இடங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதில், பாஜக., கேட்ட தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பாஜக., கூறியுள்ளது. சென்னையில் 5 தொகுதி உள்பட 20 தொகுதிகளின் பட்டியல் ஓகே ஆகி உள்ளது என்று பாஜக., கூறியுள்ளது.
தற்போதைய சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு அச்சாரம் இட்டுள்ளது கடந்த தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட பாஜக இம்முறை ஜெயலலிதா இல்லாத சூழலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2021 சட்டமன்ற தேர்தல் களத்தை சந்திக்கிறது .
முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக தலைமையில்தான் கூட்டணி என்ற ரீதியில் பேசி வந்த பாஜக பின்னர் அதிமுகவுடன் கூட்டணியில் மாநில தேர்தல் அளவில் இறங்கி வந்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தாலும் சட்டமன்ற தேர்தலில் எப்படியும் வெற்றியை பெற்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் கூட்டணி தேர்தல் களத்தை சந்திக்கிறது
இந்நிலையில், கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் இழுபறி ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று உடன்பாடு எட்டப்பட்டது. பாஜக வுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக இரு தரப்பு தலைவர்களும் நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மேலும், கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிடும் என்றும் உடன்படிக்கையில் கையெழுத்தாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், கூட்டணி, தொகுதிகள், போட்டியிடும் இடங்கள் இவற்றை இறுதி செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன..அதிமுக., கூட்டணியில், 60 இடங்கள் வரை கேட்டு வந்தது பாஜக.,! ஆனால் அதிமுக தரப்பில் 15 தொகுதிகள் தருவதாக கூறப்பட்டு, தற்போது, கேட்ட தொகுதிகள் என்ற கணக்கில் 20 இடங்களுக்கு ஒப்புக் கொண்டுள்ளது பாஜக.,
இடையே, டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை வைத்து, அமமுக.,வை அதிமுக., கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று பாஜக தலைமை விரும்பியது. ஆனால், இந்தப் பேச்சை தொடக்கத்திலேயே எதித்தனர், எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர். அமமுக.,வையும் கூட்டணியில் இணைக்க பாஜக., விரும்பியதாகவும், அது இயலாததால் அதிமுக, பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது.
இடையே சசிகலா தாம் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டார் இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதையடுத்து அமமுக., போட்டியிடுமா என்ற சந்தேகம் கூட ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய இணை அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங் ஆகியோர் அதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாங்கள் விரும்பும் தொகுதிகளை கொடுத்தால் கேட்கும் தொகுதிகளைக் குறைத்துக் கொள்வதாக பாஜக தரப்பில் கூறப்பட்டது. அதன்படி பாஜக., தனக்கு பலம் வாய்ந்த தொகுதிகள் என கொடுக்கப்பட்ட 20 தொகுதிகளை வழங்க அதிமுக சம்மதம் தெரிவித்தது. இதன்படி, 20 தொகுதிகளுக்கு பாஜக ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளது.
இந்த கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக இருதரப்பும் வெளியிட்டுள்ளது
தற்போதைய நிலவரத்தில், அதிமுக கூட்டணியில் இதுவரை… பாமக -23, பாஜக -20, தமாகா – 3 ஆகியவற்றுடன், மீதம் – 188 தொகுதிகள் உள்ளன.