உலகம் முழுவதும் மிரட்டிவரும் கொரோனா வைரஸ் தொற்று, புதிய கோணத்தில் மீண்டும் உருவெடுத்து வருவது விஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அந்த வகையில், அதிகமாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை சார்ந்த ‘சார்ஸ் கொரோனா வைரஸ் 2’ மேலும் உருமாறி, ‘டெல்டா பிளஸ்’ ஆக உருமாறியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த வகையிலான வைரஸ் இந்தியாவில் குறைந்த அளவே காணப்படுவதால் கவலைப்பட வேண்டாம் எனவும் கூறுகின்றனர்.
இந்தியாவில் கண்டுப்பிடிக்கப்பட்ட மிக மோசமான 2வது அலைக்கு முக்கிய காரணமாக விளங்கியது டெல்டா என்ற வகையை சேர்ந்த வைரஸ் தொற்று. ஆனால் தற்போது அந்த வகையான வைரஸ் புதிதாக உருமாறி டெல்டா பிளஸ் ஆக உருவெடுத்துள்ளது.
இந்த வகையான வைரஸ் சார்ஸ் கொரோனா வைரஸ் 2ன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அது மனித செல்களில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துவதற்கு இந்த புதுவகை வைரஸ் உதவுவதாக தில்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணை உயிரியல் நிறுவன விஞ்ஞானி வினோத் ஸ்காரியா தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த டெல்டா பிளஸ் வைரஸ் கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை. அதன் தன்மைகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.