கோயில் நகைகளை உருகும் தமிழக அரசின் அறநிலையத் துறை முடிவினை எதிர்த்து இந்து முன்னணி போராட்டத்தை அறிவித்திருக்கிறது.
சென்னை மாநகர இந்து முன்னணியின் செயற்குழுக் கூட்டம் நேற்று (19.10.21) மாலை சென்னை சிந்தாதிரிப்பேட்டை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் மாநகர, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். மாநகரத் தலைவர் ஏ.டி. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழுவில், மாநில அமைப்பாளர் க. பக்தன் கலந்துகொண்டு வழிகாட்டினார்.
இந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம், திருக்கோவில் நகைகளை உருக்கும் முடிவை கைவிடக் கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், சென்னை மாநகரத்தில் 18 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சென்னையின் 3 மாவட்டங்களில், மாநில அமைப்பாளர் க.பக்தன், மாநில செயலாளர் மணலி த. மனோகரன், மாநகரத் தலைவர் ஏ.டி. இளங்கோவன் ஆகியோர் தலைமையிலும், மற்ற இடங்களில் மாநகர, மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இன்று அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பக்தர்களை, ஆன்மிக அமைப்புகளை, கோவில்களில் பக்தியுடன் நேர்த்திக்காக தாலியை, தங்கத்தை காணிக்கையாக்கும் தாய்மார்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்வது என தீர்மானிக்கப்பட்டதாக, இந்து முன்னணி அமைப்பின் மாநகர செய்தித் தொடர்பாளர் க.கணேசன் தெரிவித்தார்.