
கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி 25000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 48000 கனஅடியாக உயர்ந்துள்ளது.
இதனால், மாவட்ட நிர்வாகம் பரிசலில் செல்லவும், குளிக்கவும் தடை விதித்துள்ளது.
ஒகேனக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நாட்றாபாளையம், ஒகேனக்கல் வனப்பகுதி, கேரட்டி, அஞ்செட்டி, பிலிகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 85mm மழை பெய்துள்ளது.
இதனால், நீர்வரத்து அதிரடியாக உயர்ந்துள்ளது. மழை வெள்ளத்தின் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிஅருவி, ஐவர்பாணி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் செந்நிற அருவிகளாக மாறியுள்ளது.
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கிய 24 மணி நேரத்திற்குள் மீண்டும் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.