கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்திலும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்றும் மாவட்டம் முழுவதும் மழை பெய்த நிலையில் நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. ஆணைக்கிடங்கு பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 27 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் மலையில் தொடர்ந்து மழையும் பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.11 அடியாக இருந்தது. அணைக்கு 505 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 57.05 அடியாக உள்ளது. 204 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 13.22 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 17.70 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 27.72 அடியாகவும் உள்ளது.
பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது.
அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடும்பம் குடும்பமாக வந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தக் குளியலிட்டு செல்கிறார்கள். சாரல் மழையும் பெய்து வருவதால் திற்பரப்பில் ரம்மியமான சூழல் நிலவுகிறது.





