தேசிய அரசியலில் ராகுலும் மாநில அரசியலில் ஸ்டாலினும் இன்றைய மீம்ஸ் க்ரியேட்டர்களிடம் சிக்கிக் கொண்டு விழிக்கிறார்கள்! அதுவும் திமுக.,வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மைக் காலமாக அதிகமாகவே தடுமாறுகிறார்.
சரளமாக பிரச்னைகளைப் பற்றி தொய்வின்றிப் பேசி, மக்கள் பிரச்னைகளை மக்களின் மனத்தில் முதலில் எடுத்துச் சென்று, பின்னர் அவையில் வைத்து அவர்களின் குரல் அரசின் காதுகளில் ஒலிக்கச் செய்திட வேண்டும். அத்தகைய பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டிய மு.க.ஸ்டாலின் நினைவாற்றல் குறைவால் அவதிப்படுகிறாரா அல்லது, ஏன் எல்லாவற்றையும் தவறாகவே பதிந்துவைத்துள்ளார் என்று ஆச்சரியப்படுகிறார்கள், அவரது பேட்டிகளையும் பேச்சுகளையும் பார்ப்பவர்கள்.
பழமொழிகளை சொதப்பினார். சுதந்திர தினம் குடியரசுதினத்தை மாற்றினார். சரிதா சரிகா என்று உளறினார். பெயர்களைக் குறிப்பிடுவதில் தடுமாற்றம். தேதிகளை நினைவில் கொள்வதில் தடுமாற்றம். இப்படி எல்லாம் இருந்தும், திமுக.,வின் இளைஞரணிச் செயலராக முதுமையின் தடுமாற்றத்தில் இருக்கும் காலம் வரை இருந்துள்ளார் என்பதை சுட்டிக் காட்டி கேலி செய்கிறார்கள் நெட்டிசன்கள்.
தற்போதைய லேட்டஸ்ட் தடுமாறல்… முதலமைச்சரின் ஊர் பெயரை உளறியது. சேலம் அருகே இருப்பதுதான் எடப்பாடியும் வாழப்பாடியும். வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸ் தலைவராக இருந்து அமரரானவர். சென்ற தலைமுறை வரை பலருக்கும் பழக்கமான பெயராகவே இருந்தது இந்த வாழப்பாடி.
தமிழகத்தின் முதல்வர் யார் என்று பள்ளிக் குழந்தைகளிடம் கேட்டாலும் சொல்லிவிடும் போல இருக்கிறது, ஓர் எதிர்க்கட்சித் தலைவருக்கு இத்தகைய தடுமாற்றம் இருப்பது அபாயகரமானது!
அவரது தடுமாற்ற்றத்தைக் கேட்டால்தான் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல், மதில் மேல் பூனையாக நின்று கொண்டிருப்பவர்களும் திமுக.,வின் நிலையை உணர்ந்து கொள்வார்கள்… இந்த லட்சணத்தில் பினாமி அரசு என்று தமிழக அரசை சொல்ல வேண்டிய தகுதி தனக்கு இருக்கிறதா என்பதை யாரோ எழுதிக் கொடுத்து இத்தனை காலம் வாசித்து வந்த அந்த எழுத்தாளரின் பினாமியாக தான் இருந்ததை உணர்ந்து கொண்டால், ஸ்டாலின் புரிந்து கொள்வார்.!
குறிப்பாக ஸ்டாலின் வாழப்பாடி என்று உச்சரிக்கும் போது, உடன் இருக்கும் துரை முருகன் கடும் அதிர்ச்சியில் திருப்பிப் பார்க்கும் அந்த ஒரு நொடிக் காட்சியை உற்று நோக்கினால், திமுக.,வினர் எவ்வளவுக்கு ஸ்டாலினால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்பது அவருக்கே புரியும்!