ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை வரிவசூலிக்கும் அதிகாரிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் அரசு சார்பில் ஆன்-லைன் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேர்வு எழுத கழுதை ஒன்றுக்கு அரசு அதிகாரிகள் நுழைவுச்சீட்டு அனுப்பி இருக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீர் அரசு தேர்வாணையம் தரப்பில் இந்த நுழைவுச் சீட்டு கழுதைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் தொழில்நுட்ப குறைபாடுகளால் கழுதையின் புகைப்படம் இடம் பெற்றுவிட்டது என்றும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
ஏனென்றால் பெயர் என்ற இடத்தில், ‘பிரவுன் நிற கழுதை’ என்ற பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டு, கழுதையின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது கழுதையின் புகைப்படமும், பெயரும் இடம் பெற்ற நுழைவுச்சீட்டு, பேஸ்புக், ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
இது குறித்து மாநில அரசு தேர்வாணைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாகிவிட்டனர். ஆனால், சமூக ஊடகங்களில் கழுதைக்கு நுழைவுச்சீட்டு கொடுத்த விஷயத்தை கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.
‘கடுமையாக உழைத்து, படித்த கழுதைக்கு, வரிவசூல் அதிகாரி தேர்வுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு ஹால்டிக்கெட் வழங்கி இருக்கிறது’ என்று சிலரும், ‘ஏற்கனவே மாட்டுக்கு ஹால்டிக்கெட் வழங்கிய அரசு இப்போது கழுதைக்கு வழங்கி இருக்கிறது’ என்று பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.




