சென்னை: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை உடைக்கச் சொன்னதும் மோடிதான்னு சொன்னாலும் சொல்லுவாரு போல இந்த வேல்முருகன் என்று குரல் எழும்பினால் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை.
தமிழகத்தில் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட்ட பலருக்கும் இப்போது மோடி காய்ச்சல் கண்டு ஜன்னி வந்து பிடித்தாட்டுகிறது. எதற்கெடுத்தாலும் மோடி பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பதும் வாடிக்கை ஆகிவிட்டது.
அண்மையில் கைது செய்யப் பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப் பட்டிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்களை சந்திக்க தூத்துக்குடி நோக்கிச் சென்ற வேல்முருகனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நிபந்தனை ஜாமீனில் வெளியான வேல்முருகன், செய்தியாளர்களிடம் பேசியபோது, பிரதமர் மோடி உத்தரவின் பேரிலேயே என்னை கைது செய்தார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பாமக., சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பன்ருட்டி பகுதியில் மட்டுமே அறிமுகமான வேல்முருகன், பின்னர் கட்சியில் இருந்து வெளியேறி, தனிக்கட்சி துவங்கி, ஆட்களைத் திரட்டி அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். அவரை கைது செய்யச் சொல்லும் அளவுக்கு நாட்டின் பிரதமர் மோடி, வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார் என்ற ரீதியில் புகார் கூறியிருக்கிறார் வேல்முருகன்.
முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சிலர் தாக்கினர். இதே போல நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் வேல்முருகன் உள்ளிட்ட பலர் மீது நெய்வேலி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த 2 வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட வேல்முருகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் கோரி வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரண்டு வழக்குகளிலும் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் புழல் சிறையில் இருந்து வேல்முருகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


