
சென்னை: தமிழக சிலைத் தடுப்புப் பிரிவு போலீஸ் ஐஜி.,யாக இருந்த பொன்.மாணிக்கவேல் அங்கிருந்து ரயில்வே ஐஜி.,யாக மாற்றப்பட, தங்கள் உத்தரவையும் மீறி இப்படி ஒரு மாற்றத்தைச் செய்த தமிழக அரசுக்கு குட்டு வைத்த நீதிமன்றம், தானே தலையிட்டு மீண்டும் அவரை பழைய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு பதவியிலேயே நியமித்தது.
இதனால் எரிச்சல் அடைந்துள்ள காவல் துறை உயரதிகாரிகள், தங்களது முழுமையான ஒத்துழைப்பை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அளிக்காததால், பொன்.மாணிக்கவேலுவால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இந்நிலையில், பழனி முருகன் கோவில் தங்கச் சிலை உள்ளிட்ட பல்வேறு சிலை தொடர்பான விவகாரங்களிலும், அரசுத் தரப்பில் பொன்.மாணிக்கவேலுவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதை அடுத்துதான் நீதிமன்றத்தில் தன் உள்ளக் குமுறலைக் கொட்டித் தீர்த்தார் பொன்.மாணிக்கவேல்.
பொன்.மாணிக்கவேலை இட மாற்றம் செய்து, குற்றவாளிகளுக்கு சாதகமாக அதிமுக., அரசு நடந்து கொள்கிறது என்று சந்தேகம் எழுப்ப பட்ட நிலையில், தமிழக அரசின் இது போன்ற போக்கே, அதன் மீது குற்றத்தின் சாயல்கள் படிந்துள்ளதைக் காட்டுவதாக அரசியல் மட்டத்திலும் கருத்துகள் எழுப்ப பட்டன.
இந்நிலையில், பழனி சிலை விவகாரத்தில் திமுக., முக்கியப் புள்ளிகள் சிலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர பொன்.மாணிக்கவேல் முயற்சி செய்துள்ளார். இதை அடுத்தே, அவர்கள் அரசுத் தரப்பில் அழுத்தம் கொடுத்து அந்த விசாரணையைத் தடுத்து விட்டதாக குற்றச்சாட்டுகள் கிளம்பிஉள்ளன.
இருப்பினும், பொன்.மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தின் துணையுடன் மீண்டும் தனது விசாரணைக் கட்டத்தில் வேகம் எடுத்திருப்பதால் இதில் தொடர்புடைய திமுக., முக்கியப் புள்ளிகள் பெரும் கலக்கத்தில் உள்ளதாகக் கூறப் படுகிறது.


