“2009 தேர்தலில் பாமக கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து தோல்வி கண்டது”- மு.க.ஸ்டாலின்!
அதே 2009 ல் இன்னொன்றும் நடந்தது! திமுக – காங்கிரஸ் கூட்டணி! தமிழ் தேசிய, தனி ஈழ ஆதரவாளர்கள் திமுகவை விட்டு விட்டனர் – ஆனால் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளை மட்டும் குறிவைத்துக் காங்கிரசைத் தோற்கடிக்கப் பிரசாரம் செய்தனர். துல்லியமாகக் குறிவைத்து நடத்தப்பட்ட அரசியல் தாக்குதல் அது!
திமுக கள்ள மௌனம் சாதித்தது! காரணம்? காங்கிரஸ் வேட்பாளர்கள் பலர் ஏற்கனவே மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் – மீண்டும் மத்தியில் ஐமுகூ., அரசு அமையுமானால் அமைச்சராக வாய்ப்புள்ளவர்கள்!
எனவே அவர்கள் வென்றால் மத்திய மந்திரிசபையில் தங்களுக்கான பங்கு குறைந்துவிடும் என திமுக கணக்குப்போட்டது! எனவே காங்கிரசை மட்டும் குறிவைத்து தமிழ் ஈழ ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் பிரசாரத்தை திமுக கண்டுகொள்ளவில்லை!
அப்படியே மயிலாடுதுறை (மணிசங்கர ஐயர்), சேலம் (தங்கபாலு), ஈரோடு (EVKS இளங்கோவன்), திருப்பூர் (கார்வேந்தன்), கோவை (P.R.பிரபு) ஆகியோர் தோற்றனர். ‘அண்ணன் எப்போது சாவான்?’- எனக் காத்திருந்த திமுக குஷியாக அமைச்சரவையில் ‘லட்டு’ தின்றது. இது போக திருச்சி (சாருபாலா தொண்டமான்) போன்ற காங்கிரசின் ‘ஸ்டார்’ வேட்பாளர்களும் தோற்றனர்! சிவகங்கையில் சிதம்பரம் மட்டும் ‘ரீ கவுண்டிங்’ கில் ஜெயித்தார்! (அல்லது திமுக அவர் ஜெயிக்கும்படி பார்த்துக் கொண்டது!)
இப்படி தமிழ் ஈழ ஆதரவாளர்களின் பிரசாரம் மூலம் தன்னுடைய கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் தோற்றதையே மௌனமாக ரசித்தது திமுக!
இதுவும் 2009 பார்லிமெண்ட் தேர்தலில்தான் நடந்தது – இப்போது காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 10 சீட்டிலும் அது கரை ஏறாத வகையில் தமிழ் தேசியர்கள் பிரசாரம் செய்வார்களா? திமுக அதை மௌனமாக ரசிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!
– முரளி சீதாராமன்