
நெல்லை-கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வறண்ட வானிலையால் இருந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வந்துள்ளது.
இந்நிலையில் சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வந்தபோதிலும் நேற்று எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்ய வில்லை.
இதனைதொடா்ந்து தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தேனி, கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களிலும் மிக கன மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
12 செ.மீ. முதல் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இரவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



