
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் திருக்கோயிலில் முதலாழ்வார்களாகிய ஸ்ரீபொய்கை ஆழ்வார், ஸ்ரீபூதத்தாழ்வார், ஸ்ரீபேயாழ்வார் ஆகியோர் திருவீதி புறப்பாடு கண்டருளினர். ஸ்ரீபேயாழ்வாரின் அவதார திருநக்ஷத்திர தினமான ஐப்பசி சதயம் இன்று காலை சித்திரை வீதிகளில் புறப்பாடு கண்டருளினர்.
காலை 9.30 மணிக்கு ஸ்ரீ.ரங்கநாதர் மூலவர் ஸன்னதிக்கு எழுந்தருளிய ஆழ்வார்கள் அங்கு மங்களாஸாஸனம் கண்டருளி, பெருமாள் மாலை மரியாதைகளை பெற்றுக் கொண்டு பின்னர் ஸ்ரீ.நம்மாழ்வார் ஸன்னதிக்கு எழுந்தருளி அங்கு மாலை மரியாதை கண்டருளினர்.
பின் தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதிகளில் எழுந்தருளி பின்னர் வடக்கு சித்திரை வீதியில் தாயார் ஸன்னதிக்கு எழுந்தருளினர்.
அங்கு மங்களாஸாஸனம் முடிந்து, வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி புறப்பாடு கண்டருளிய பின்னர், தெற்கு சித்திரை வீதியின் ஒரு பகுதி வழியாக ரங்கா, ரங்கா கோபுரம் வழியாக திருக்கோயிலுக்குள் எழுந்தருளினர்.

பின்னர், உள் ஆண்டாள் ஸன்னதியில் மங்களாஸாஸனம் ஆகி பின்னர் முதலாழ்வார்களின் ஸன்னதிக்கு எழுந்தருளினர்.
வீதி புறப்பாட்டின் போது, புறப்பாடு தொடங்கிய இடத்தில் இருந்து ஸ்ரீபொய்கை ஆழ்வார் அருளிச் செய்த முதல் திருவந்தாதி கோஷ்டியும், அடுத்து ஸ்ரீ.ரங்கநாயகித் தாயார் ஸன்னதியில் இருந்து எழுந்தருளிய பிறகு வடக்கு சித்திரை வீதியில் ஸ்ரீ.பூதத்தாழ்வார் அருளிச் செய்த இரண்டாம் திருவந்தாதியும், பின்னர் ஸ்ரீ.ஆண்டாள் ஸன்னதியில் இருந்து எழுந்தருளிய பிறகு ஸ்ரீ.பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாம் திருவந்தாதியும் கோஷ்டி ஆனது.

ஆழ்வார்கள் ஸன்னதிக்கு எழுந்தருளிய பின்னர் ஸ்ரீ.பெரிய பெருமாளின் அலங்காரங்கள் ஆழ்வார்களுக்கு அளிக்கப்பட்டு, பின்னர் கோயில் திருவாய்மொழி கோஷ்டி ஆகி சாற்றுமுறை ஆனது.
- தகவல்: ராகவன் நெம்மேலி விஜயராகவாச்சாரி