மருதூர் அனுமந்தராயசாமி திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா
கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.மூலவர் அனுமந்தராயசாமி கருவறையில் ஸ்ரீராம பிரானின் பக்தராக கரம் குவித்து வணங்கும் பக்த ஆஞ்சநேயராக காட்சி தந்தாலும், இத்தலம் வந்து சேவித்த பக்தர்களின் வாழ்வில், எடுத்த காரியங்கள் எல்லாம் ஜெயமானதால் இவர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் என்றும் போற்றப்படுகிறார்.
இந்த திருத்தலத்தில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமை விழா விமரிசையாக நடைபெறும்.
இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மூலவருக்கு காலையில் திருமஞ்சனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலையில் சாற்றிய வெண்ணை நாள் முழுவதும் உருகாமல் இருப்பது மேலும் அனுமனின் மகிமையை உலகறியச் செய்கிறது.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு முத்துக்கல்லூர் மற்றும் சுற்று வட்டார பஜனைக் குழுவினரின் சிறப்பு பஜனையும் நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் சின்னத்தடாகம், துடியலூர், ஊட்டி, கோத்தகிரி,குன்னூர்,பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி,புஜங்னூர்,வெள்ளியங்காடு மற்றும் தோலம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மருதூர் ஆஞ்சநேயர் பக்தர்கள் குழு சார்பில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
தகவல் : செ.வீ.பா.சங்கத்தமிழன்