
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது
பூலோக வைகுண்டம் என்றும் வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும் போற்றப்படும் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் பகல் பத்து ராப்பத்து மற்றும் இயற்பா என 21 நாள்களுக்கு வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று இரவு 7 மணிக்கு கோவில் மூலஸ்தானத்தில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது தொடர்ந்து சந்தன மண்டபத்தில் அரையர்கள் சேவையுடன் நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன
பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பாடு கண்டருளி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளும் நம்பெருமாள் பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் நாளான ஜனவரி 5ஆம் தேதி இரவு மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்

மறுநாள் 6ஆம் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது அன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது உற்சவ நாட்களில் திருமங்கை மன்னனின் வேடுபரி நிகழ்ச்சியை தவிர மற்ற ஒன்பது நாட்கள் சொர்க்க வாசல் திறந்தே இருக்கும்

ஜனவரி 16 ஆம் தேதி நம்மாழ்வார் மாற்றத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடைகிறது
வைகுண்ட ஏகாதசி உற்சவம் தொடக்க நாள் முதல் நிறைவு பெறும் நாள் வரை மூலவர் எம்பெருமான் முத்தங்கி சேவை சாதிக்கிறார்

படங்கள் மற்றும் வீடியோ தொகுப்பு: விஜயராகவன் கிருஷ்ணன், ஸ்ரீரங்கம்


