
மேன்மேல் உயர்ச்சி
தன்மட்டில் இரவாது சீவனம் செய்பவன்
சாமர்த்தியம் உளபுருடன் ஆம்
சந்ததம் பதின்மரைக் காப்பாற்று வோன்மிக்க
தரணிபுகழ் தருதேவன் ஆம்.
பொன்மட்டி லாமலீந் தொருநூறு பேரைப்
புரப்பவன் பொருவி லிந்த்ரன்,
புவிமீதில் ஆயிரம் பேர்தமைக் காப்பாற்று
புண்யவா னேபிரமன் ஆம்
நன்மைதரு பதினா யிரம்பேர் தமைக்காத்து
ரட்சிப்ப வன்செங் கண்மால்,
நாளுமிவன் மேலதிகம் ஆகுவெகு பேர்க்குதவு
நரனே மகாதே வன் ஆம்,
அன்மட்டு வார்குழலி பாகனே! ஏகனே!
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இருள் போலக் கருநிறமான, மணமிக்க, நீண்ட கூந்தலையுடைய உமையம்மையாரை
இடப்பாகத்தில் உடையவனே!, தனி முதல்வனே!, தலைமையிற் சிறந்தவனே, எமது தேவனே!,
(பிறரை) நாடாமல் தன்வரையில் வாழ்க்கை நடத்துவோன் திறமுடைய ஆடவனாவான், எப்போதும் பதின்மரை ஆதரிப்போன் இவ்வுலகு புகழும் சிறந்த
அமரன் ஆவான், அளவின்றிப் பொருள் கொடுத்து நூறுபேரைக் காப்பாற்றுவோன் ஒப்பற்ற இந்திரன் ஆவான், உலகில் ஆயிரவரை ஆதரிக்கும் அறத்தலைவனே நான்முகன் ஆவான், நன்னெறி
செல்லும் பதினாயிரம்பேரைக் காப்பாறியருள்வோன் செந்தாமரைக் கண்ணனான திருமால் ஆவான், எந்நாளும் அவனைவிட மிகுதியாக அளவற்றவர்க்குக் கொடுக்கும் மனிதனே
மகாதேவன் ஆவான்.
இங்குக் கூறியவாறு ஈவோர்க்கு உயர்ச்சி கொள்க.