அறப்பளீஸ்வர சதகம்: நல்லவற்றில் குற்றம்!

Published:

arapaliswarar - 2026

நற்பொருளிற் குற்றம்

பேரான கங்கா நதிக்கும் அதன் மேல்வரும்
பேனமே தோட மாகும்!
பெருகிவளர் வெண்மதிக் குள்ளுள் களங்கமே
பெரிதான தோட மாகும்!
சீராம் தபோ தனர்க் கொருவர்மேல் வருகின்ற
சீற்றமே தோட மாகும்!
தீதில்முடி மன்னவர் விசாரித்தி டாதொன்று
செய்வதவர் மேல்தோ டமாம்!
தாராள மாமிகத் தந்துளோர் தாராமை
தான்இரப் போர்தோ டமாம்!
சாரமுள நற்கருப் பஞ்சாறு கைப்பதவர்
தாலம்செய் தோட மாகும்!
ஆராயும் ஒருநான் மறைக்கும்எட்டாதொளிரும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

ஆராய்ச்சி செய்யப்படுகிற ஒப்பற்ற நான்கு மறைகளுக்கும் கிடையாத
பெரியோனே!, அருமை தேவனே!. புகழ்பெற்ற கங்கையாற்றுக்கும் அதன்மேல் வருகின்ற நுரை ஒன்றே குற்றம் எனப்படும், மிக வளர்ச்சியுடைய
வெள்ளைத் திங்களுக்கு அதனுள் இருக்கின்ற கறுப்பே பெரிய குற்றம்
எனப்படும், கீர்த்திமிக்க தவத்தினர்க்கு மற்றவர்மேல் உண்டாகும் சினமே
குற்றம் எனப்படும், குற்றமற்ற பேரரசர்கள் ஆராயாமல் ஒன்றைச் செய்வது அவர்க்குக் குற்றம் எனப்படும், அளவின்றி (முன்)
கொடுத்தவர்கள் (பின்) கொடாமை இரவலரின் (ஊழ்வினைக்) குற்றம்
எனப்படும், சிறப்புடைய நல்ல கருப்பஞ்சாறு கசப்பது (பருகுவோருடைய) நாவின் குற்றம் எனப்படும்.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

Related articles

Recent articles

spot_img