
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகேயுள்ள சிக்காரம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட படியனூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமைமிகுந்த முருகப்பெருமான் திருத்தலம் உள்ளது.படியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் தைபூசத் திருத்தேர் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது.
இத்திருவிழாவையொட்டி தை மாதம் 1 ஆம் தேதி திருக் கொடியேற்றம் நடைபெற்றது. மறுநாள் முருக பக்தர்கள் குழு ஆறாம் ஆண்டு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை இரவு பால்குடம் எடுத்தல் அதன் பின் அம்மன் அழைப்பு நடைபெற்றது. தைப்பூச நாளான திங்கட்கிழமை மூலவர் பழநி ஆண்டவர் அபிஷேக பூஜை முடிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இரவு 8 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு நடைபெற்றது.வள்ளி தெய்வானை சமேதராக திருத்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமான் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க திருக்கோயிலை திருத்தேரில் வலம் வந்தார்.

இவ்விழாவில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ், கோயம்புத்தூர் மாவட்ட முன்னாள் ஊராட்சித் துணைத் தலைவர் எஸ்.ஞானசேகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் படியனூர், சின்னப்படியனூர், வடவள்ளி, சென்னிவீரம்பாளையம், சிக்காராம்பாளையம், கள்ளிப்பாளையம், கரிச்சிப்பாளையம், சின்னக்காரனூர், கன்னார்பாளையம், வெள்ளிக்குப்பம்பாளையம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

இன்று மதியம் காவடி விழா முடிந்து இரவு பரிவேட்டை, தெப்பம், மஞ்சநீர் வழிபாடு நடைபெறுகிறது. நாளை மறுபூஜையையொட்டி அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.
செய்தி, படங்கள்: எஸ்.வி.பி. சங்கத்தமிழன்


